போராட்டம் நடத்தி காதலனை திருமணம் செய்த இளம்பெண் தீக்குளித்து தற்கொலை
கும்மிடிப்பூண்டி: காதலன் வீட்டு முன்பு போராட்டம் நடத்தி அவரை திருமணம் செய்து கொண்ட இளம்பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியை அடுத்த எளாவூரைச் சேர்ந்தவர் ராமானுஜம். இவரது மகள் பிரமிளா(21). ஆசிரியர் படிப்பு முடித்திருந்தார். தலையாரிப்பாளையத்தை சேர்ந்த ராமலிங்கம் மகன் ஜெயின்(21) என்பவரும், பிரமிளாவும் பள்ளி பருவத்தில் இருந்தே காதலித்து வந்தனர்.
பிரமிளாவின் வீட்டில் மாப்பிள்ளை பார்க்க ஆரம்பித்தனர். இதையடுத்து பிரமிளாவும், ஜெயினும் கடந்த பிப்ரவரி மாதம் 9ம் தேதி பொன்னேரி சார்பதிவாளர் அலுவலகத்தில் ரகசியமாக பதிவுத் திருமணம் செயது கொண்டனர்.
அதன் பிறகு காதலன் ஜெயின் தனது குடும்பத்தினரின் பேச்சைக் கேட்டு பிரமிளாவை மனைவியாக ஏற்றுக்கொள்ள மறுத்தார். இதனையடுத்து கடந்த ஆகஸ்ட் 24ம் தேதி ஜெயின் வீட்டின் முன்பு பிரமிளா போராட்டம் நடத்தினார். 3 நாட்கள் பிறகு கிராம பெரியோர் சமரசம் செய்து வைத்ததையடுத்து பிரமிளாவுக்கு தாலிக்கட்டிய ஜெயின் அவரை மனைவியாக ஏற்றுக் கொண்டார்.
திருமணத்துக்கு பின் ஜெயின் அவரது குடும்பத்தாருடன் சேர்ந்து வரதட்சணையாக 50 பவுன் நகை வாங்கி வருமாறு பிரமிளாவைக் கொடுமைப்படுத்தியதாகக் கூறப்படுகிறது. கொடுமையைத் தாங்க முடியாத பிரமிளா தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீவைத்தார். இதில் பலத்த தீக்காயமடைந்த பிரமிளாவை கீழ்ப்பாக்கம் அரசு பொது மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
இது குறித்து பிரமிளாவின் தந்தை ராமானுஜம் ஆரம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். பிரமிளாவை வரதட்சணைக் கேட்டு கொடுமைப்படுத்தியதால் தான் அவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டதாக புகாரில் தெரிவித்துள்ளார். போலீஸ் இன்ஸ்பெக்டர் வேணுகோபால் இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்.