மதுரை- பாமக நிர்வாகியைக் கொன்ற 3 விடுதலைச் சிறுத்தைகள் வெட்டிக் கொலை- ஒருவர் உயிர் ஊசல்
மதுரை: மதுரையில் சில மாதங்களுக்கு முன்பு நடந்த பாமக பிரமுகர் படுகொலைச் சம்பவத்தில் தொடர்புடைய 3 பேர் இன்று அவனியாபுரம் பகுதியில் கொடூரமாக வெட்டிக் கொல்லப்பட்டனர். இவர்கள் மூவரும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்தவர்கள். ஒருவர் உயிர் ஊசலாடி வருகிறது.
நடுரோட்டில் வைத்து நடந்த பயங்கர சம்பவத்தால் அவனியாபுரம் பகுதியில் பெரும் பதட்டம் நீடிக்கிறது.
தேர்தல் முன்விரோதம்
மதுரையைச் சேர்ந்தவர் இளஞ்செழியன். பாமக மாநில துணை பொதுச் செயலாளராக இருந்தவர். அவருக்கும் மதுரையைச் சேர்ந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில துணை பொது செயலாளர் சிற்றரசு என்பவருக்கும் இடையே கடந்த 2006ம் ஆண்டு நடந்த உள்ளாட்சித் தேர்தலில் இருந்து முன்விரோதம் இருந்து வந்தது.
இந்நிலையில் இளஞ்செழியன் கடந்த மே மாதம் நடந்த சட்டமன்றத் தேர்தலில் சோழவந்தான் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். இதையடுத்து அவருக்கும், சிற்றரசுவுக்கும் உள்ள விரோதம் மேலும் வலுத்தது.
இளஞ்செழியன் படுகொலை
இதையடுத்து சிற்றரசின் ஆதரவாளர்கள் கடந்த மாதம் இளஞ்செழியனை அவரை அவனியாபுரம் அருகே சரமாரியாக வெட்டினர். இதில் இளஞ்செழியன் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து இறந்தார்.
இதனால் இளஞ்செழியன் ஆதரவாளர்கள் ஆத்திரம் அடைந்தனர். பழிக்குப் பழிவாங்க நினைத்த அவர்களுடன் இளஞ்செழியனின் தம்பி மாரியும் சேர்ந்து கொண்டார்.
நடுரோட்டில் சரமாரி வெட்டு
இன்று காலை 11 மணியளவில் மாரியும், அவரது ஆதரவாளர்களும் அவனியாபுரத்தில் தெருவில் சென்று கொண்டிருந்த சிற்றரசுவின் ஆதரவாளர்கள் 4 பேரை நடுத்தெருவில் வைத்து அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பியோடிவிட்டனர்.
இதில் 3 பேர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தனர். ஒருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.