கடலோர தமிழகம், புதுவையில் 24 மணி நேரத்துக்கு கன மழை நீடிக்கும்- வானிலை மையம்
சென்னை: தமிழகத்தின் கடலோர மாவட்டங்கள், புதுச்சேரியில் வரும் 24 மணிநேரத்திற்கு கன மழை நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வடக்கு கடலோர மாவட்டங்கள், தென் தமிழகம், உள்புறத் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,
இலங்கை முதல் ஆந்திர மாநிலம் தெற்கு வங்கக்கடல் வரை புதன்கிழமை குறைந்த காற்றழுத்தத் தாழ்வுநிலை உருவானது. இது வியாழக்கிழமை காலை 8.30 மணி நிலவரப்படி மேற்கு நோக்கி நகர்ந்து கன்னியாகுமரி முதல் தமிழகத்தின் தென்மேற்கு வங்கக்கடல் வரை நிலை கொண்டுள்ளது.
மேலும் இந்தக் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுநிலை மன்னார் வளைகுடா மற்றும் பாக் ஜலசந்தி இடையே நீடிப்பதால், அடுத்த 24 மணி நேரத்துக்கு கடலோர மாவட்டங்களில் கனமழை நீடிக்கும். புதுவை, தமிழகத்தின் உள்பகுதிகள், தென் தமிழகம், வடக்குக் கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும்.
சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். ஒருசில இடங்களில் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று திருவாரூர், புதுக்கோட்டை, நாகை, திருவள்ளூர், சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் நல்ல மழை பெய்தது. அதிகபட்சமாக தரங்கம்பாடியில் 60 மில்லி மீட்டர் மழை பதிவானது.
சென்னையில் பள்ளிகளுக்கு விடுமுறை
சென்னையில் விடிய விடிய மழை பெய்ததால் பள்ளமான இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது. கடந்த மாதத்தில் பெய்த மழைக்கே சென்னை நகர சாலைகள் குண்டும் குழியுமாக மாறியுள்ள நிலையில் தற்பொழுது மீண்டும் மழை வலுத்துள்ளதால் பள்ளமான சாலைகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர். விடிய விடிய பெய்த கனமழை தற்போது சாரல் மழையாக மாறியுள்ளதால் சென்னை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications