திருமங்கலம் அருகே சிலிண்டர் வெடித்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலி
மதுரை: திருமங்கலம் அருகே சிலிண்டர் வெடித்து ஒரே குடும்பத்தை சேர்ந்த 2 குழந்தைகள் உட்பட 4 பேர் பரிதாபமாக பலியானார்கள்.
திருமங்கலம் அருகே உள்ள குதிரைசாரிகுளம் கிராமத்தைச் சேர்ந்த ராஜாமணி மகன் வீரபாண்டி(37). இவர் ரைஸ் மில் வைத்து அரிசி வியாபாரம் செய்து வந்தார். ரைஸ் மில்லின் ஒரு பகுதியிலேயே இவரது வீடும் உள்ளது.
இந்த நிலையில் வீரபாண்டி, அவரது மனைவி செல்வி (32), குழந்தைகள் ஷர்சினி (7), நந்தகுமாரன் (4) ஆகியோர் இரவில் தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது நள்ளிரவில் வீரபாண்டி வீட்டில் இருந்த சுவிட்ச் போர்டில் மின் கசிவு ஏற்பட்டுள்ளது.
இந்த தீப்பொறி கீழே வைக்கப்பட்டிருந்த சமையல் எரிவாயு சிலிண்டர் மீது பட்டதால், சிலிண்டர் திடீரென்று பயங்கரமாக வெடித்துச் சிதறியது. இதனால் வீடே தீயும், கரும் புகையுமாக காட்சி தந்தது. இந்த சம்பவத்தில் வீரபாண்டி குடும்பத்தினர் அனைவரும் தீயில் கரிகி பலியாகினர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்புபடையினர் நிலைய அதிகாரி கதிரேசன் தலைமையில் துரிதமாக செயல்பட்டு தீயை அணைத்தனர்.
இது குறித்து திருமங்கலம் டவுன் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் உடல் கருகி பலியான சம்பவம் திருமங்கலம் பகுதியை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.