வடகிழக்கு பருவ மழைக்கு இதுவரை 87 பேர் உயிரிழப்பு – பல கோடி ரூபாய் பொருட்கள் சேதம்
சென்னை: தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழைக்கு இதுவரை 87 பேர் வரை உயிரிழந்துள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பருவமழைக்கு பல ஆயிரம் ஏக்கர் பரப்பளவிலான விளைநிலங்கள் நீரில் மூழ்கியுள்ளன. நூற்றுக்கணக்கான கால்நடைகள் பலியாகியுள்ளன.
தமிழ்நாட்டில் அக்டோபர் மாதம் இறுதியில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது. ஒரு மாத காலம் விட்டு விட்டு மூன்று கட்டமாக பெய்துள்ள மழைக்கு மின்சாரம் தாக்கியும், வீடு இடிந்து விழுந்தும், வெள்ளநீரில் அடித்துச்செல்லப்பட்டும் இதுவரை 87 பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்த அனைவருக்கும் தலா ரூ. 2 லட்சம் நிவாரணத் தொகை வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
வீடுகள், உடமைகள் சேதம்
கன மழையால், தமிழகத்தில் 3,425 வீடுகள் பகுதியாகவும், 897 வீடுகள் முழுவதுமாகவும் சேதமடைந்திருக்கின்றன. இதில் காஞ்சிபுரத்தில் 78 வீடுகளும், திருவள்ளூரில் 77 வீடுகளும் பகுதியளவில் சேதமடைந்தன. திருவள்ளூரில் மட்டும் 77 வீடுகள் முழுவதுமாகச் சேதமடைந்தன. இவற்றில் பகுதி சேதத்துக்கு ரூ.2,500ம், முழு சேதத்துக்கு ரூ.5 ஆயிரமும் நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது.
மேலும், மழையால் பாதிக்கப்பட்ட, இடம்மாற்றப்பட்ட மக்கள் எண்ணிக்கை சுமார் 10 ஆயிரத்தைக் கடந்திருப்பதாக வருவாய்த்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இவர்களுக்குத் தலா ரூ.1000 நிவாரணம் வழங்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. பருவ மழையால் பல்வேறு வகைகளில் ஏற்பட்ட பாதிப்புகளுக்காக, இதுவரை சுமார் ரூ.5.5 கோடி நிவாரணம் வழங்கப்பட்டிருப்பதாக வருவாய்த்துறையினர் தெரிவித்தனர்.
கால்நடைகள் உயிரிழப்பு
மழை, வெள்ளத்தில் சிக்கி இதுவரை 298 கால்நடைகள் உயிரிழந்திருக்கின்றன. இதில் மாடுகளுக்கு ரூ.20 ஆயிரம், ஆடுகளுக்கு தலா ரூ.1000 வீதம் நிவாரணம் வழங்கப்பட்டு வருகிறது.
கனமழையால் தஞ்சாவூர், திருவாரூர், நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களில் பல ஆயிரக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த பயிர்கள் நிரில் மூழ்கியுள்ளன. தமிழ்நாடு முழுவதும் பழுதடைந்த சாலைகளைக் கணக்கிடும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் வருவாய்த்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications