பிரதமர், சோனியா வருகைக்கு முன்பு இம்பாலில் குண்டுவெடிப்பு: ஒருவர் பலி
பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வருவதற்கு நடந்த இந்த குண்டுவெடிப்பால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
மணிப்பூரில் கடந்த 120 நாளாக பொருளாதார தடையை அமலாக்கியிருந்தன நாகா கவுன்சில் அமைப்பினர். இதனால் அந்த மாநிலமே ஸ்தம்பித்துப் போனது. இந்தத் தடையை சமீபத்தில் தான் நாகா கவுன்சில் நீத்தியது.
இந் நிலையில் இம்பாலில் இன்று காலை 11 மணிக்கு சக்தி வாய்ந்த குண்டு வெடித்தது. இதில் ஒருவர் கொல்லப்பட்டார் என்று கூறப்படுகிறது. கிழக்கு இம்பாலில் சாங்காய் சுற்றுலா விழா நடந்து கொண்டிருக்கிறது. அந்த விழா நடக்கும் இடத்திற்கு அருகில் தான் இந்த குண்டுவெடிப்பு சம்பவம் நடந்துள்ளது. இன்று விழாவின் இறுதி நாள் என்பதால் அங்கு கூட்டம் இல்லை. அதனால் பெருமளவில் உயிர் இழப்பு தவிர்க்கப்பட்டுள்ளது.
பிரதமர் மன்மோகன் சிங் திறந்து வைக்கவிருக்கும் சிட்டி கன்வென்ஷன் சென்டர் அருகில் இந்த குண்டுவெடிப்பு சம்பவம் நடந்துள்ளது.
பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோர் வரும் டிசம்பர் மாதம் 3ம் தேதி மணிப்பூர் செல்கின்றனர். அங்கு அவர்கள் புதிய சட்டசபை கட்டிடம், சிங்மெய்ராங்கில் கட்டப்பட்டுள்ள மணிபூர் உயர் நீதிமன்ற வளாகம் உள்ளிட்ட சில கட்டிடங்களை திறந்து வைக்கின்றனர்.
அவர்கள் வருகைக்கு 2 நாட்களுக்கு முன்னர் இந்த குண்டுவெடிப்பு சம்பவம் நடந்துள்ளது. இதனால் மணிபூரில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.