மெட்ரோ பயணத்தில் மாஸ் பிளான்.. 24 ரயில்கள், 160 ஸ்டேஷன்கள்.. டெல்லியின் அசத்தல் வசதி
சென்னை: மெட்ரோ நிர்வாகம் மாஸ் அறிவிப்பு ஒன்றை அறிவித்துள்ளது.. டெல்லியின் போக்குவரத்து நெரிசலை குறைக்கவும், எரிபொருளை சேமிக்கவும், பொதுப் போக்குவரத்தை ஊக்குவிக்கும் விதமாக டெல்லி மெட்ரோ ரயில் கழகம் (DMRC) முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதன்படி, ஒவ்வொரு திங்கட்கிழமையும் கூடுதலாக 24 மெட்ரோ ரயில் பயணங்களை இயக்க DMRC திட்டமிட்டுள்ளது. இதை பற்றி இங்கே சுருக்கமாக பார்ப்போம்.
டெல்லி மெட்ரோ, இந்தியாவின் தலைநகரையும் அதன் அருகிலுள்ள நகரங்களையும் இணைக்கும் மிக முக்கியமான மற்றும் வேகமான பொதுப் போக்குவரத்து தூணாக விளங்கி கொண்டிருக்கிறது.

தலைநகரில் சாலைகளில் நிலவும் கடுமையான போக்குவரத்து நெரிசலை குறைப்பதிலும், லட்சக்கணக்கான பயணிகளின் தினசரி பயண நேரத்தை சேமிப்பதிலும் இது பெரும் பங்காற்றுகிறது. மின்சாரத்தில் இயங்கும் இந்த நவீன போக்குவரத்து முறை, சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பு ஏற்படுத்தாத வகையில் கார்பன் உமிழ்வைக் குறைப்பதில் உலகளவில் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
24 மெட்ரோ ரயில்
டெல்லி-என்சிஆர் பகுதிகளுக்கிடையே தடையற்ற இணைப்பை வழங்குவதுடன், குறைந்த செலவில் பாதுகாப்பான மற்றும் வசதியான பயணத்தை உறுதி செய்வதால், இது நகரின் பொருளாதார வளர்ச்சிக்கும் பொதுமக்களின் அன்றாட வாழ்விற்கும் தவிர்க்க முடியாத ஒரு உயிர்நாடியாக மாறியுள்ளது.
அதனால்தான், பயணிகளின் அவசியம் மற்றும் தேவையை கருத்தில் கொண்டு, ஒவ்வொரு திங்கட்கிழமையும் கூடுதலாக 24 மெட்ரோ ரயில் பயணங்களை இயக்க DMRC திட்டமிட்டுள்ளது... இந்த புதிய நடைமுறை கடந்த மே 18, 2026 அன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.
டெல்லி மெட்ரோ அசத்தல் மாற்றங்கள்
இந்த திட்டத்திற்காக 6 கூடுதல் ரயில்கள் பிரத்யேகமாக களமிறக்கப்பட்டுள்ளன. சிவப்பு, மஞ்சள், நீலம் மற்றும் இளஞ்சிவப்பு ஆகிய வழித்தடங்களில் தலா ஒரு கூடுதல் ரயிலும், ஊதா நிற வழித்தடத்தில் இரண்டு கூடுதல் ரயில்களும் இயக்கப்படுகின்றன. பயணிகள் கூட்டத்தைப் பொறுத்து, இந்த சேவைகளை வாரத்தின் பிற நாட்களிலும் விரிவுபடுத்தப் போவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
டெல்லி முதல்வர் ரேகா குப்தா, எரிபொருள் சிக்கனத்தை கடைப்பிடிக்க அரசு அதிகாரிகள் திங்கட்கிழமைகளில் பொது போக்குவரத்தை பயன்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தியிருந்தார். அந்த வேண்டுகோளை ஏற்று, அரசு ஊழியர்கள் மட்டுமின்றி பொதுமக்களும் மெட்ரோ பயணத்திற்கு முன்னுரிமை அளிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுவதால், இந்த கூடுதல் சேவைகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.
மாஸ் வசதிகள்
அந்த ஸ்பெஷல் சேவைகள் என்னென்ன தெரியுமா? கூட்ட நெரிசலை சமாளிக்க மெட்ரோ ரயில் நிலையங்களில் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளும் பலப்படுத்தப்பட்டுள்ளன. கூடுதல் பாதுகாப்பு பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர், பயணச்சீட்டு வழங்கும் கவுண்டர்கள் அதிகரிக்கப்பட்டுள்ளதாம்.
அதுமட்டுமல்லாமல், பயணிகளின் வசதிக்காக DFMD எனப்படும் கதவு வடிவ உலோகக் கண்டுபிடிப்பான்கள் மற்றும் சாமான்களை ஸ்கேன் செய்யும் கருவிகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. சோதனை சாவடிகளில் மக்கள் காத்திருக்கும் நேரத்தைக் குறைக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
160 மெட்ரோ ஸ்டேஷன்கள்
பயணிகள் மெட்ரோ நிலையங்களுக்கு வந்து செல்வதை எளிதாக்கும் வகையில், last-mile என்ற இறுதி மைல் இணைப்பு சேவைகளும் வலுப்படுத்தப்பட்டுள்ளன. சுமார் 160 மெட்ரோ நிலையங்களில் இ-ஆட்டோக்கள், இ-ரிக்ஷாக்கள், பைக் டாக்சிகள் மற்றும் வாடகை சைக்கிள் வசதிகள் கிடைக்கின்றன. மத்திய விஸ்தா பகுதியில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் உதவியுடன் ஹைட்ரஜன் மூலம் இயங்கும் பேருந்து சேவைகளும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.
மெட்ரோ பயணத்தை மேலும் எளிதாக்க, பயணிகள் மெட்ரோ சாரதி செயலியைப் பதிவிறக்கம் செய்து பயன்படுத்த அறிவுறுத்தப்படுகிறார்கள். கியூஆர் கோடு, தேசிய பொது நடமாட்ட அட்டை மற்றும் வாட்ஸ்அப் வழியாகவும் பயணச்சீட்டுகளை பெற்றுக்கொள்ள முடியும். இந்த ஒருங்கிணைந்த பயண ஏற்பாடுகள் மற்றும் கூடுதல் ரயில்கள் மூலம், தனிநபர் வாகனங்களைப் பயன்படுத்துவதைக் குறைத்து, டெல்லியின் சாலைகளில் நிலவும் போக்குவரத்து நெரிசலை பெருமளவு கட்டுப்படுத்த முடியும் என்று மெட்ரோ நிர்வாகம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications