6 'ஐஎம்' தீவிரவாதிகள் கைது-ஜெர்மன் பேக்கரி குண்டுவெடிப்பு குற்றவாளி படம் வெளியீடு!
டெல்லி போலீசாரின் துணையோடு இந்தியன் முஜாஹிதீன் தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் இருவர் பாகிஸ்தானியர்கள். இந்தியாவில் நடந்த பல முக்கியமான குண்டுவெடிப்பு சம்பவங்களில் அவர்களுக்கு தொடர்பு உள்ளது.
முகமது சித்திக், ஜாஃபர், அப்துல் ரஹ்மான், இர்ஷாத் கான் மற்றும் பாகிஸ்தானைச் சேர்ந்த முகமது அப்சல், முகமது அஜ்மல் ஆகிய 6 இந்தியன் முஜாஹிதீன் தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். அந்த 6 பேரும் சென்னை, பீகார் மற்றும் டெல்லியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
3 குண்டுவெடிப்புகளில் தொடர்புடையவர்கள்
கடந்த 2010ம் ஆண்டு பெங்களூர், மும்பை மற்றும் புனேவில் நடந்த குண்டுவெடிப்புகளுடன் தற்போது கைதான 6 பேருக்கும் தொடர்பு உள்ளது என்று தகவல்கள் கிடைத்துள்ளன.
டெல்லி ஜாமியா மஸ்ஜிதில் நடந்த குண்டுவெடிப்புக்கும் இந்த 6 பேருக்கு தொடர்பு உண்டு என்று போலீசார் தெரிவித்தனர். பெங்களூர் சின்னசாமி ஸ்டேடியம் வெளியே நடந்த இரட்டை குண்டுவெடிப்பு மற்றும் புனேவின் ஜெர்மன் பேக்கரி குண்டுவெடிப்பு வழக்கிலும் அவர்களுக்கு தொடர்பு இருக்கக்கூடும் என்று சந்தேகிக்ககப்படுகிறது.
போலி பாஸ்போர்ட் வழக்கில் அப்சல், அஜ்மல் ஆகியோர் மதுபானியில் சிக்கினர் என்று டெல்லி போலீசார் தெரிவித்தனர்.
சென்னையில் சிக்கிய 2 பேர்
கைது செய்யப்பட்டவர்களில் இர்ஷத் கான் என்பவரும், அப்துல் ரஹ்மானும் சென்னையில் பிடிபட்டவர்கள் என்பது நினைவிருக்கலாம்.
ஜெர்மன் பேக்கரி குண்டுவெடிப்பின் மூளை
இந்த நிலையில் புனே ஜெர்மன் பேக்கரி குண்டுவெடிப்பு குறித்த முக்கிய தகவலையும் போலீஸார் வெளியிட்டுள்ளனர். இந்த சம்பவத்திற்கு மூளையாக திகழ்ந்தது இம்ரான் அல்லது யாசீன் பட்கல்தான் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான புகைப்படம் ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது.
வெடிகுண்டு இருப்பதாக கருதப்படும் பையுடன் பட்கல் ஜெர்மன் பேக்கரிக்குள் நுழைவது போன்று அந்தப் படம் உள்ளது. இந்தப் பை குண்டுவெடிப்பு நடந்த இடத்திலிருந்து கண்டுபிடிக்கப்பட்டது நினைவிருக்கலாம். இம்ரான் இதுவரை சிக்கவில்லை.