இலங்கை கடற்படை கைது செய்த 5 மீனவர்களை விடுவிக்கக் கோரி 5,000 மீனவர்கள் ஸ்டிரைக்
ராமேஸ்வரம்: இலங்கை கடற்படை பிடித்துச் சென்ற 5 தமிழக மீனவர்களை விடுதலை செய்யக்கோரி ராமேஸ்வரத்தில் 5,000 மீனவர்கள் இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
700 விசைப்படகுகளில் சுமார் 3,000க்கும் அதிகமான மீனவர்கள் நேற்று முன்தினம் ராமேஸ்வரத்தில் இருந்து கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர். அவர்கள் இந்திய-இலங்கை கடல் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருக்கையில் அங்கு வந்த இலங்கை கடற்படையினர் அவர்களை மீன் பிடிக்கக் கூடாது என்று கூறி விரட்டினர்.
மேலும் தங்கச்சிமடத்தைச் சேர்ந்த கிளாட்வின் என்பவரின் படகை மடக்கினர். அதில் இருந்த மீனவர்கள் எமர்சன், அகஸ்டஸ், போல்டட், பிரசாந்த், வில்சன் ஆகியோரை கைது செய்து இலங்கை நெடுந்தீவு கடற்படை முகாமிற்கு கொண்டு சென்றனர்.
இது குறித்து தகவல் அறிந்த ராமேஸ்வரம் மீனவர்கள் உடனே நடந்தவற்றை ராமேஸ்வரம் மீன்துறை அலுவலகத்துக்கும், இந்திய கடலோர காவல் படைக்கும் தெரிவித்தனர். இந்நிலையில் நேற்று மாலை ராமேஸ்வரத்தில் அனைத்து மீனவர் சங்கங்களின் கூட்டம் நடந்தது. அதில் இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்த படகைத் திருப்பித் தர வேண்டும், கைது செய்து கொண்டு போன 5 மீனவர்களையும் உடனே விடுவிக்க வேண்டும், இல்லையெனில் காலவரையற்ற வேலை நிறுத்தம் செய்வது என்று முடிவு எடுக்கப்பட்டது.
ஆனால் அந்த 5 மீனவர்களும் விடுவிக்கப்படவில்லை. இதையடுத்து இன்று ராமேஸ்வரத்தில் 5,000 மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் 700 விசைப்படகுகள் கரைகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications