கோர்ட்டை அவமதித்த இன்ஸ்பெக்டரை 5 மணி நேரம் கூண்டில் நிறுத்திய நீதிபதி
கோவை: நீதிமன்றத்தை அவமதித்த இன்ஸ்பெக்டருக்கு நீதிமன்ற கூண்டில் 5 மணிநேரம் நிற்க வைத்து நூதன தண்டனை அளித்தார் கோவை மாஜிஸ்திரேட்.
கோவை மாவட்டம், காரமடை பகுதியில் கடந்த 2010ம் ஆண்டு நடந்த கொள்ளை வழக்கில் 3 கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கின் சாட்சிகள், மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டனர்.
ஆனால் விசாரணை அதிகாரியான இன்ஸ்பெக்டர் சென்னகேசவன் நீதிமன்றத்தில் தொடர்ந்து ஆஜராகவில்லை. இதனால் அதிருப்தி அடைந்த மாஜிஸ்திரேட் சீனிவாசன், விசாரணை அதிகாரியான இன்ஸ்பெக்டர் சென்னகேசவனுக்கு வாரன்ட் பிறப்பித்து உத்தரவிட்டார்.
ஒரு மாதத்துக்குப்பின் நேற்று அந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிமன்றத்துக்கு வந்த இன்ஸ்பெக்டர் உனடியாக நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. மாறாக இந்த வழக்கில் ஆஜரான வக்கீல்கள் வெளியே சென்ற பிறகு நீதிமன்றத்திற்கு சென்றார்.
வாரன்ட் பிறப்பிக்கப்பட்ட ஒருவர் நீதிமன்றம் துவங்கும் முன்பே ஆஜராகி இருக்க வேண்டும். ஆனால் அப்படிச் செய்யாமல் நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் அவர் நடந்து கொண்டதாக கூறிய மாஜிஸ்திரேட், காலை 11.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை விசாரணைக் கூண்டில் நிற்க உத்தரவிட்டார்.
அதன்படி இன்ஸ்பெக்டர் சென்னகேசவன் 5 மணி நேரம் நீதிமன்ற கூண்டில் நின்றார். பின்னர் அரசு வக்கீல் வந்த பிறகே வாரன்ட் திரும்ப பெறப்பட்டது. இதன்பிறகு நீதிமன்றத்தில் இருந்து இன்ஸ்பெக்டர் விடுவிக்கப்பட்டார்.












Click it and Unblock the Notifications