விதிமீறிய கட்டடங்களில் வைக்கப்பட்ட சீலினை அகற்ற உயர்நீதிமன்றம் மறுப்பு
சென்னை: சென்னை தியாகராயநகரில் விதிமீறிய கட்டடங்களுக்கு சி.எம்.டி.ஏ அதிகாரிகள் வைத்த சீலினை அகற்றுவதற்கு உத்தரவிட சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துவிட்டது. ரங்கநாதன் தெரு வியாபாரிகள் சங்கம் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிமன்றம் தற்போதுள்ள நிலையே நீடிக்கும் என்று தெரிவித்து விட்டனர்.
சென்னை தியாகராய நகரில் விதிமுறைகளை மீறி கட்டப்பட்டிருந்த 32 கட்டடங்களுக்கு கடந்த அக்டோபர் 31 –ம் தேதி சிஎம்டிஏ அதிகாரிகள் சீல் வைத்தனர். இதனை எதிர்த்து தி.நகர் கட்டட உரிமையாளர்களும் வியாபாரிகள் சங்கத்தினரும் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். அதில் சீல் வைத்த கடைகளை திறக்க உத்தவிட வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். இந்த மனு உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி எம்.ஒய். இக்பால், நீதிபதி சிவஞானம் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது.
வியாபாரிகள் சார்பாக ஆஜரான வழக்கறிஞர் அல்டாப் அகமது, தியாகராய நகரில் உள்ள கட்டடங்கள் தொடர்பாக ஒவ்வொருமுறையும் ஆட்சி மாற்றம் ஏற்படும் போது வெவ்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாக தெரிவித்தார்.
நுகர்வோர் அமைப்பு சார்பில் வாதாடிய வழக்கறிஞர், விதிமீறலை சரி செய்வது குறித்து கட்டட உரிமையாளர்கள் சார்பில் வழங்கப்படும் உறுதிமொழி பின்பற்றப்படுவதில்லை என்று தெரிவிக்கப்பட்டது. எனவே சீலினை அகற்றக்கூடாது என்றும் கேட்டுக்கொண்டார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் விதிமீறிய கட்டடங்களுக்கு வைக்கப்பட்ட சீலை அகற்ற உத்தரவிட முடியாது என்று தெரிவித்த நீதிபதிகள் வழக்கை டிசம்பர் 20 ம் தேதிக்கு ஒத்திவைத்தனர். அதுவரை தற்போதுள்ள நடைமுறையே தொடரும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.












Click it and Unblock the Notifications