1 லட்சம் லஞ்சம் பெற்ற நெடுஞ்சாலை துறை கோட்ட பொறியாளர் கைது
நெல்லை: சாலை ஓப்பந்த பணிக்காக ஒப்பந்ததாரரிடம் 1 லட்சத்து 31 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய நெல்லை நெடுஞ்சாலை துறை கோட்ட பொறியாளரை லஞ்ச ஓழிப்பு போலீசார் கைது செய்தனர்.
பாளையங்கோட்டையை சேர்ந்தவர் காண்டிரக்டர் செல்லையா. இவர் ஆலங்குளம் அருகே குறிப்பான்குளம் முதல் கிராடங்குளம் வரையிலான சாலைகளை பழுது பார்க்கும் திட்டத்தின் கீழ் பராமரிப்பு செய்யும் பணிக்கு கடந்த ஆகஸ்ட் மாதம் டெண்டர் பெற்றார்.
இதற்கான வேலையின் மதிப்பு ரு.15 லட்சத்து 50 ஆயிரம் ஆகும். சாலையை பழுது பார்க்கும் பணிக்கான உத்தரவை விரைவில் தனக்கு வழங்க கோரி நெல்லை நெடுஞ்சாலை துறையில் கோட்ட பொறியாளராக பணிபுரியும் சவுந்திரராஜை காண்டிரக்டர் செல்லையா அணுகினார்.
அதற்கு அவர் ஓப்பந்த பணிக்கான வேலை உத்தரவை கண்காணிப்பு பொறியாளருக்கு பரிந்துரை செய்ய தனக்கு டெண்டர் மதிப்பில் 8.1 சதவிதமான ரூ.1 லட்சத்து 31 ஆயிரத்தை தர வேண்டும் என்று கேட்டுள்ளார். இதற்கு 29 ம் தேதி பணத்தை தருவதாக ஓப்புக் கொண்ட செல்லையா இது குறித்து நெல்லை லஞ்ச ஓழிப்பு போலீசில் புகார் செய்தார்.
கையும் களவுமாக கைது
போலீஸ் ஏற்பாட்டின் பேரில் செவ்வாய்கிமை மாலை செல்லையா ரூ.1 லட்சத்து 31 ஆயிரத்தை சவுந்திரராஜிடம் கொடுத்தார். அப்போது மறைந்திருந்த டிஎஸ்பி மனோகர குமார், இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் மற்றும் போலீசார் சவுந்திரராஜை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.
அவரிடமிருந்து பணத்தை பறி்முதல் செய்தனர். அவரது அலுவலகத்தில் சோதனை நடத்தி சில முக்கிய ஆவணங்களை கைப்பற்றினர். தொடர்ந்து பாளையங்கோட்டை தியாகராஜ நகரில் உள்ள அவரது வீட்டிலும் போலீசார் சோதனை நடத்தினர். கைதான சவுந்திர ராஜை பாளையகோட்டை சிறையில் அடைத்தனர்.