தொடர்ந்து கூக்குரலிட்டு வரும் கேரளா மீது உடனே நடவடிக்கை எடுங்கள்- பிரதமருக்கு ஜெ. கடிதம்

இதுதொடர்பாக அவர் பிரதமருக்கு எழுதியுள்ள கடிதம்:
முல்லைப் பெரியாறு அணை பிரச்சினையில் கேரள அரசின் அணுகுமுறை குறித்து நான் ஏற்கனவே 23-11-11 அன்று உங்களுக்கு கடிதம் எழுதியுள்ளேன். அதன் தொடர்ச்சியாக இந்த கடிதத்தை எழுதுகிறேன்.
முல்லைப் பெரியாறு அணை பிரச்சினை தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் இருக்கின்ற நிலையில், முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பாக இல்லை என்றும், புதிய அணை கட்டுவதுதான் இந்தப் பிரச்சினைக்கு ஒரே தீர்வு என்றும் கேரள அரசு தொடர்ந்து கூக்குரலிட்டு வருவதாக பத்திரிகைகளில் செய்தி வெளியாகியுள்ளது.
மாநில எல்லையில், தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக பஸ்கள் தாக்கப்படுவதாகவும், வன்முறையை தூண்டும் வகையில் தீய செயல்கள் நடப்பதாகவும் எனது கவனத்திற்கு கொண்டுவரப்பட்டு உள்ளது.
இந்த விஷயத்தில், நாங்கள் மிகுந்த கட்டுப்பாடுடன் இருக்கும்போது, பொது அமைதி மற்றும் இயல்பு வாழ்க்கைக்கு பாதிப்பு ஏற்படுத்தும் விஷமிகளை அடக்கி வைக்க வேண்டும் என்று முன்எச்சரிக்கையாக கேரள அரசை அறிவுறுத்த வேண்டும்.
முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பாக இருக்கிறது என்றும், புதிய அணையைப் போல சிறப்பாக செயல்படுகிறது என்றும் நான் மீண்டும் வலியுறுத்திக் கூறுகிறேன். இந்தப் பிரச்சினை தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டிலும், அதிகாரம் அளிக்கப்பட்ட குழுவிடமும் விசாரணையில் இருக்கும்போது, இந்தப் பிரச்சினையை பெரிதாக்கும் வகையில், புதிய அணை கட்டுவது என்று கூறி வருவதை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று கேரள அரசுக்கு அறிவுரை வழங்க வேண்டும் என்பதே எனது கருத்து.
நான் 23-11-11 அன்று உங்களுக்கு எழுதிய கடிதத்தில் இதுகுறித்து ஏற்கனவே வேண்டுகோள் விடுத்திருந்தேன். தற்போதைய சூழ்நிலையில் மீண்டும் வேண்டுகோள் விடுக்கிறேன்.
இரு மாநில அரசுகளின் நலனைக் கருத்தில் கொண்டு இந்தப் பிரச்சினையில் கண்மூடித்தனமாக நடந்து கொள்ள வேண்டாம் என்று கேரள அரசை நீங்கள் வலியுறுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இந்த விஷயத்தில் நீங்கள் உடனடியாக நடவடிக்கை எடுப்பீர்கள் என்று எதிர்பார்க்கிறேன் என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.
முதல்வர் ஜெயலலிதா முல்லைப் பெரியாறு பிரச்சினை தொடர்பாக தொடர்ந்து கடிதம் எழுதிக் கொண்டிருக்கிறார். ஆனால் பிரதமரும் சரி, மத்திய அரசும் சரி கிணற்றில் போட்ட கல்லாகவே உள்ளனர். குறைந்தபட்சம், கேரளாவை ஆண்டு வரும் தனது கட்சிக் கூட்டணி அரசுக்கு அட்வைஸ் செய்யக் கூட காங்கிரஸ் மேலிடம் முன்வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications