கேரளாவின் முயற்சிகளைக் தடுக்க பிரதமரிடம் நேரில் ஜெ. முறையிட வைகோ கோரிக்கை
நெல்லை வந்த வைகோ அங்கு செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது முல்லைப் பெரியாறு அணை விவகாரம் குறித்து அவர் பேசுகையில், கேரள அரசும், அங்குள்ள கட்சிகளும், படு தீவிரமாக புதிய அணைக்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர். டெல்லியில் ஆதரவு திரட்டி வருகின்றனர்.
அணை விவகாரத்தில் முன்னாள் மற்றும் இன்னாள் கேரள முதல்வர்கள் இணைந்து செயல்படுகின்றனர். அரசியல் கட்சிகள் ஒருங்கிணைந்து குரல் கொடுக்கின்றன. அதேபோல இங்கும் நடக்க வேண்டும். புதிய அணை கட்டுவதில் அவர்கள் தீவிரமாக உள்ளனர்.
கேரளாவின் இந்த முயற்சிகள் நிறைவேறாமல் தடுக்க வேண்டும். இதை தமிழக அரசு உடனடியாக செய்ய வேண்டும். முதல்வர் ஜெயலலிதா, உடனடியாக டெல்லி சென்று பிரதமர் மன்மோகன் சிங்கை நேரில் சந்தித்து முறையிட வேண்டும்.
தமிழக எம்.பிக்கள் அத்தனை பேரையும் கூட்டிக் கொண்டு அவர் டெல்லி செல்ல வேண்டும். நமது பக்க நியாயத்தை பிரதமரிடம் வலியுறுத்திக் கூறி கேரளாவின் முயற்சிகளுக்கு முட்டுக்கட்டை போட வேண்டும்.
மத்திய அரசு தமிழகத்திற்கு எப்போதுமே கேடாகத்தான் நடந்து வருகிறது. அணை கட்டி தண்ணீர் கொடுப்பதாக இருந்தால் கேரளா புதிய அணை கட்டிக் கொள்ளலாமே என்று மத்திய அமைச்சர் பன்சால் கூறியதாக கேரளா கூறுகிறது. எனவே மத்திய அரசு எப்போதுமே தமிழகத்திற்கு நல்லது நினைத்ததில்லை. கேடுதான் நினைத்து வருகிறது.
எனவே அதைத் தடுக்க வேண்டும். கேரளா புதிய அணை கட்டவும் விடக் கூடாது, தற்போதையை அணையை இடிக்கவும் விடக் கூடாது. கேரளா அதன் போக்கில் நடந்தால் தமிழகத்தில் விபரீதங்கள் நடப்பதைத் தடுக்க முடியாது என்று பிரதமரிடம் முதல்வர் ஜெயலலிதா அழுத்தம் திருத்தமாக வலியுறுத்திச் சொல்ல வேண்டும்.
அவருக்கு இப்போது நல்ல வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இதைப் பயன்படுத்தி அனைத்து எம்.பிக்களையும் அழைத்துக் கொண்டு பிரதமரைச் சந்தித்து கேரளாவின் முயற்சிகளைத் தடுக்க முயல வேண்டும் என்றார் வைகோ.