மதுரையில் டிவி நிருபருக்கு அரிவாள் வெட்டு: 2 ரவுடிகளுக்கு வலைவீச்சு
மதுரை: மதுரையில் பாலிமர் டிவி நிருபரை ரவுடிகள் அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியோடிவிட்டனர்.
மதுரையில் பாலிமர் டிவி சேனல் நிருபராக பணியாற்றி வருபவர் குமரேசன். இவர் மதுரை விசுவாசபுரி 3வது தெருவில் பிரவுசிங் சென்டர் நடத்தி வந்தார். இந்த நிலையில் அங்கு வந்த ஆரப்பாளையத்தைச் சேர்ந்த ரவுடி லூர்து சுரேஷும், இன்னொருவரும் மாமூல் கேட்டனர். ஆனால் அவர்களுக்கு மாமூல் தர நிருபர் குமரேசன் மறுத்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த அந்த 2 ரவுடிகளும், நிருபர் குமரேசனை அரிவாளால் வெட்டினர். பின்பு பிரவுசிங் சென்டரை சேதப்படுத்திவிட்டு அங்கிருந்து தப்பியோடிவிட்டனர். இதில் படுகாயமடைந்த குமரேசன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இது குறித்து குமரேசன் கரிமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அவரது புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து நிருபரை அரிவாளால் வெட்டிய ரவுடிகள் 2 பேரையும் தேடி வருகின்றனர்.