பணத்துக்காக பள்ளி மாணவனை தலையில் அடித்து கொன்று புதைத்த தாய், மகன் கைது
திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் பள்ளி மாணவனை கொலை செய்த வழக்கில் தாயும், மகனும் கைது செய்யப்பட்டனர். தாய் அளித்த வாக்குமூலத்தில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.
திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கத்தை அடுத்த வெளுகனந்தலைச் சேர்ந்தவர் ராமகிருஷ்ணன். மத்திய பாதுகாப்பு படை வீரர். அவரது மகன் வினோத் குமார்(12).அதேப் பகுதியில் உள்ள பள்ளியில் 6வது வகுப்பு படித்து வந்தார்.
கடந்த 20ம் தேதி மாலையில் விளையாட சென்ற வினோத் குமார் வீடு திரும்பவில்லை. வினோத்குமாரை பல இடங்களில் தேடிய பெற்றோர், இது குறித்து
போலீசாரிடம் புகார் அளித்தனர். இந்த நிலையி்ல் வினோத் குமாரின் பெற்றோருக்கு போன் செய்த மர்மநபர்கள், வினோத் குமாரை கடத்தி வைத்திருப்பதாகவும், அவரை விடுவிக்க ரூ.30 லட்சம் தர வேண்டும் என்றும் மிரட்டினர்.
வெளுகனந்தல் கிராமத்தைச் சேர்ந்த சாந்தி(34), சாலையனூரைச் சேர்ந்த சுபாஷ்(28), சென்னை, திருநின்றவூரைச் சேர்ந்த பசுபதி(30) ஆகியோரை சந்தேகத்தின் பேரில் போலீசார் விசாரித்தனர். அப்போது சாந்தி அளித்த தகவலின் பேரில் அவரது வீ்ட்டின் பின்புறம் புதைக்கப்பட்டிருந்த வினோத் குமாரின் உடல் நேற்று தோண்டி எடுக்கப்பட்டது.
உடலை பிரேத பரிசோதனை செய்ததில் வினோத் குமார் தலையில் அடித்து கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது. இது குறித்து சாந்தியிடம் விசாரித்ததில் பல திடுக்கிடும் தகவல்களை போலீசாரிடம் தெரிவித்தார்.
சாந்தி அளித்த வாக்குமூலம் குறித்து துணை சூப்பிரண்டு முகமது பலுலுல்லா கூறியதாவது,
சுமார் ரூ.7 லட்சம் கடன் வாங்கியிருந்த சாந்தி, அதனை அடைக்க முடியாமல் தவித்தார். கடனை அடைக்க தேவையான பணம் கிடைக்க, கிராம நிர்வாக அலுவலர் ஒருவரின் மகனை கடத்தி பணம் கேட்க சாந்தி திட்டமிட்டார். ஆனால் அந்த திட்டம் நடக்கவில்லை. இதனையடுத்து சாந்தியின் மகன் ராமசந்திரனின் நண்பன் வினோத் குமாரை கடத்தி அவனது பெற்றோரிடம் பணம் கேட்க திட்டமிட்டார்.
கடந்த 20ம் தேதி சாந்தியின் வீட்டிற்கு வந்த வினோத்குமார் மாலையில் தனது வீட்டிற்கு செல்ல முயன்றார். அப்போது வினோத் குமாரை தடுத்து நிறுத்திய சாந்தி, அவனது தலையில் மரக்கட்டையால் தாக்கினார். அதில் வினோத்குமார் மயக்கமடைந்தார். அப்போது வினோத் குமாரின் கழுத்தை சாந்தியும் ராமசந்திரனும் சேர்ந்து நெரித்து கொலை செய்தனர்.
அதன்பிறகு 2 பேரும் சேர்ந்து வினோத் குமாரின் உடலை வீட்டின் பின்புறம் குழி தோண்டி புதைத்துவிட்டு, அதன்மீது மரக்கட்டைகளை அடுக்கி வைத்தனர். அதன்பிறகு சுபாஷ், பசுபதி ஆகியோர் மூலம் வினோத் குமாரை விடுவிக்க பணம் தருமாறு கேட்டு மிரட்டி உள்ளனர் என்றார்.
வினோத் குமாரை கொலை செய்ய தாய் சாந்திக்கு துணையாக இருந்த மகன் ராமசந்திரனை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.