காதலன் நினைவு..தாலி கட்டும் நேரத்தில் விஷம் குடித்து திருமணத்தை நிறுத்திய மாணவி
கோவை: காதலனை மறக்க முடியாமல் தவித்த கல்லூரி மாணவி தாலி கட்டும் நேரத்தில் விஷம் குடித்து மயங்கி விழுந்ததால் திருமணம் நிறுத்தப்பட்டது.
கோவை மாவட்டம், பொள்ளாச்சியை அடுத்த மாக்கினாம்பட்டியைச் சேர்ந்தவர் 19 வயது இளம்பெண் காவ்யா(பெயர் மாற்றப்பட்டுள்ளது). பொள்ளாச்சியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரி ஒன்றில் 3ம் ஆண்டு சிவில் என்ஜினியரிங் படித்து வருகிறார்.
கடந்த சில நாட்களுக்கு முன் மேட்டுப்பாளையத்துக்கு சென்ற போது காவ்யாவுக்கு அங்கு வந்த ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த அந்த நபருடன் செல்போனில் பேசி பழக்கம் அதிகரித்து காதலாக மாறியது.
இது குறித்து அறியாத காவ்யாவின் பெற்றோர் அவருக்கு, பல்லடத்தைச் சேர்ந்த ஒருவருடன் திருமணம் நிச்சயித்தனர். ஆனால் அப்போதும் காவ்யா தனது காதல் விவகாரம் குறித்து பெற்றோரிடம் எதுவும் தெரிவிக்கவில்லை. இந்த நிலையில் நேற்று திருமணத்திற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
மணப் பந்தலுக்கு அழைத்து வரப்பட்ட காவ்யாவுக்கு முகூர்த்த நேரத்தில் மாப்பிள்ளை தாலி கட்ட முயன்றார். அப்போது தாலி கட்டவிடாமல் தடுத்த காவ்யா தனது காதல் கதையைக் கூறினார். அதனால் அதிர்ச்சியடைந்த மாப்பிள்ளை வீட்டார் பெண் வீட்டாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அதனை கண்டு மனமுடைந்த மணப்பெண், மறைத்து வைத்திருந்த விஷத்தை எடுத்து குடித்து மயங்கி விழுந்தார். அதனை கண்டு மேலும் அதிர்ச்சியடைந்த உறவினர், அவரை உடனடியாக மருத்துவமனையி்ல் சேர்த்தனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், 2 வீட்டாரிடமும் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானப்படுத்தினர். திருமணம் நின்றதையடுத்து மாப்பிள்ளை வீட்டார் சோகமாக திரும்பிச் சென்றனர்.












Click it and Unblock the Notifications