இந்தியன் முஜாஹிதீன் தீவிரவாதி இம்ரான் பற்று துப்பு கொடுத்தால் ரூ.15 லட்சம் பரிசு: டெல்லி போலீஸ்
டெல்லி: ஜெர்மன் பேக்கரி குண்டுவெடிப்பில் முக்கிய மூளையாகத் திகழ்ந்த இம்ரான் என்ற யாசீன் பட்கல் பற்றி தகவல் கொடுப்பவர்களுக்கு ரூ.15 லட்சம் பரிசு வழங்கப்படும் என்று டெல்லி போலீஸ் அறிவி்த்துள்ளது.
டெல்லி போலீசாரின் துணையோடு இந்தியன் முஜாஹிதீன் தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் இருவர் பாகிஸ்தானியர்கள். கடந்த 2010ம் ஆண்டு பெங்களூர், மும்பை மற்றும் புனேவில் நடந்த குண்டுவெடிப்புகளுடன் தற்போது கைதான 6 பேருக்கும் தொடர்பு உள்ளது என்று தகவல்கள் கிடைத்துள்ளன.
டெல்லி ஜாமியா மஸ்ஜிதில் நடந்த குண்டுவெடிப்புக்கும் இந்த 6 பேருக்கு தொடர்பு உண்டு என்று போலீசார் தெரிவித்தனர். பெங்களூர் சின்னசாமி ஸ்டேடியம் வெளியே நடந்த இரட்டை குண்டுவெடிப்பு மற்றும் புனேவின் ஜெர்மன் பேக்கரி குண்டுவெடிப்பு வழக்கிலும் அவர்களுக்கு தொடர்பு இருக்கக்கூடும் என்று சந்தேகிக்ககப்படுகிறது.
இந்த நிலையில் புனே ஜெர்மன் பேக்கரி குண்டுவெடிப்பு குறித்த முக்கிய தகவலையும் போலீசார் வெளியிட்டனர். இந்த சம்பவத்திற்கு மூளையாக திகழ்ந்தது இம்ரான் அல்லது யாசீன் பட்கல் அல்லது அகமது சித்தி பாப்பா ஜரார் அல்லது ஷாருக் தான் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான புகைப்படம் ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது.
வெடிகுண்டு இருப்பதாக கருதப்படும் பையுடன் பட்கல் ஜெர்மன் பேக்கரிக்குள் நுழைவது போன்று அந்தப் படம் உள்ளது. இந்தப் பை குண்டுவெடிப்பு நடந்த இடத்திலிருந்து கண்டுபிடிக்கப்பட்டது நினைவிருக்கலாம். இம்ரான் இதுவரை சிக்கவில்லை.
இந்நிலையில் இம்ரான் பற்றி தகவல் கொடுப்பவர்களுக்கு ரூ.15 லட்சம் சன்மானம் வழங்கப்படும் என்று டெல்லி போலீசார் அறிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications