முல்லைப் பெரியாறு அணைப் பகுதியில் மத்திய படையை நிறுத்தக் கோரி கருணாநிதி தந்தி
சென்னை: முல்லைப் பெரியாறு அணை பிரச்சினை முடிவுக்கு வரும் வரை அணைப் பகுதியில் மத்திய படைகளை பாதுகாப்புக்கு நிறுத்த உடனடி நடவடிக்கை எடுக்குமாறு முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றம் அமைத்த ஐவர் குழுவின் தலைவர் நீதிபதி ஏ.எஸ்.ஆனந்த்துக்கு திமுக தலைவர் கருணாநிதி அவசர தந்தி அனுப்பியுள்ளார்.
நேற்று இரவு அவர் அனுப்பிய தந்தியில்,
முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தில் 136 அடியில் இருந்து 120 அடியாக குறைக்க வேண்டும் என்று கேரள அரசு விடுத்துள்ள கோரிக்கையை உங்கள் தலைமையிலான குழு ஏற்றுக்கொள்ளக்கூடாது என்று தி.மு.க. சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.
ஆனால், முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 136 அடியில் இருந்து 142 அடியாக உயர்த்த வேண்டும் என்று கேரள அரசுக்கு கடந்த 2006-ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட் பிறப்பித்த உத்தரவை உடனடியாக அமல்படுத்த வேண்டும்.
மக்கள் மனதில் அச்சத்தையும், பதற்றத்தையும் ஏற்படுத்தி, இந்த பிரச்சினையை திசை திருப்பும் கேரள அரசின் முயற்சி உடனடியாக தடுத்து நிறுத்தப்பட வேண்டும். இந்த பிரச்சினை முடிவுக்கு வரும் வரை, முல்லைப் பெரியாறு அணையில் கேரள மாநில போலீசாரை பாதுகாப்புக்கு நிறுத்துவதற்கு பதிலாக மத்திய பாதுகாப்பு படை பாதுகாப்பில் இருக்க வேண்டும் என்று கருணாநிதி கூறியுள்ளார்.
கருணாநிதி- கனிமொழியை சந்தித்து கி.வீரமணி வாழ்த்து:
இந் நிலையில் திமுக தலைவர் கருணாநிதி, எம்பி கனிமொழி ஆகியோரை நேற்று இரவு சந்தித்து வாழ்த்து தெரிவித்தார் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி.
தைவான், சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்குச் சென்றிருந்த வீரமணி, நேற்று சென்னை திரும்பி சிஐடி காலனியில் உள்ள கருணாநிதியின் இல்லத்துக்குச் சென்றார். அங்கு கனிமொழியை சந்தித்து 2ஜி வழக்கில் ஜாமீனில் விடுதலையானதற்கு வாழ்த்துத் தெரிவித்தார்.