பணி நீக்க உத்தரவை எதிர்த்து மக்கள் நலப்பணியாளர்கள் தொடர் உண்ணாவிரதம்- நாளை துவக்கம்
திருச்சி: தமிழகத்தில் 13,000 மக்கள் நலப் பணியாளர்கள் நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து, தமிழ்நாடு மக்கள் நலப்பணியாளர் முன்னேற்ற சங்கம் சார்பில் நாளை (7ம் தேதி) முதல் தொடர் உண்ணாவிரத போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மக்கள் நலப் பணியாளர்கள் 13,000 பேரை, தமிழக அரசு பணி நீக்கம் செய்து உத்தரவிட்டது. தமிழக அரசின் இந்த உத்தரவை எதிர்த்து தமிழ்நாடு மக்கள் நலப் பணியாளர்கள் முன்னேற்ற சங்கம் சார்பில் நாளை முதல் தொடர் உண்ணாவிரத போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து திருச்சியில் தமிழ்நாடு மக்கள் நலப்பணியாளர் முன்னேற்ற சங்கத்தின் மாநில தலைவர் தன.மதிவாணன் கூறியதாவது,
தமிழகத்தில் மக்கள் நலப்பணியாளர்களாக பணியாற்றிய 13,000 பேரை தமிழக அரசு திடீரென பணி நீக்கம் செய்துள்ளது. இதனால் பணி இழந்த குடும்பங்கள் பல இன்னல்களை சந்தித்து வருகின்றன.
தமிழக அரசின் இந்த பணி நீக்க உத்தரவை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. மாநில அரசின் பணி நீக்க உத்தரவுக்கு உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. மேலும் பணிநீக்கம் செய்யப்பட்ட மக்கள் நலப் பணியாளர்களுக்கு மீண்டும் பணி வழங்க நீதிமன்றம் உத்தரவி்ட்டது.
கடந்த 1ம் தேதி மக்கள் நலப் பணியாளர் முன்னேற்ற சங்கத்தின் மாநிலப் பொதுக் குழு கூட்டம் சென்னையில் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் பணிநீக்கம் செய்யப்பட்ட மக்கள் நலப் பணியாளர்களுக்கு மீண்டும் பணி வழங்கக் கோரி, திருச்சி ஸ்ரீரங்கத்தில் நாளை முதல் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்த உண்ணாவிரத போராட்டத்தில் ஒவ்வொரு நாளும் 2 மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் நலப் பணியாளர்கள் வீதம் பணி திரும்ப கிடைக்கும் வரை உண்ணாவிரதம் இருப்பார்கள். நாளை நடக்க உள்ள முதல் நாள் உண்ணாவிரதத்தில் திருச்சி மாவட்டத்தை சேர்ந்தவர்களும், டிசம்பர் 8ம் தேதி புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்தவர்களும் கலந்து கொள்வார்கள் என்றார்.