சென்னை லாட்ஜில் வெறியாட்டம்: தனியார் கம்பெனி மேனேஜர் படுகொலை- என்ஜினியரிங் மாணவர் கைது
சென்னை: சென்னையில் உள்ள பஜாஜ் அல்லையன்ஸ் நிறுவனத்தின் பைனான்ஸ் மேனேஜர் ராஜேஷ் என்பவரை பொறியியல் கல்லூரி மாணவர் வெறித்தனமாகக் குத்திக் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டம், ஆரிக்கரை அருகே உள்ள முல்லக்கவிளையைச் ராஜேஷ் (29). சென்னை அம்பத்தூரில் உள்ள பஜாஜ் அலையன்ஸ் நிறுவனத்தில் பைனாஸ் மேனேஜராக இருந்தார். திருமணமாகாதவர்.
அவர் சென்னை சூளைமேடு லோகநாதன் 3-வது தெருவில் உள்ள ஸ்ரீவித்யா கெஸ்ட் ஹவுஸ் என்ற லாட்ஜில் 2வது மாடியில் உள்ள அறை எண் 306ல் தங்கி வேலை பார்த்து வந்தார். அவருடன் தங்கியிருந்தவர் அந்தமான் தலைநகர் போர்ட்பிளேயரைச் சேர்ந்த விகேஷ் வர்கீஸ் (26). அவர் சென்னையில் உள்ள பொறியியல் கல்லூரி ஒன்றில் 2ம் ஆண்டு படித்து வந்தார். சில பிரச்சனை காரணமாக கடந்த ஆகஸ்ட் மாதம் லாட்ஜ் நிர்வாகத்தினர் விகேஷை வெளியேற்றினர்.
தான் வெளியேற்றப்பட்டதற்கு ராஜேஷ் தான் காரணம் என்று நினைத்த விகேஷ் அவரைப் பழிவாங்க நினைத்தார். இந்நிலையில் நேற்று பகல் 11 மணிக்கு விகேஷ் லாட்ஜுக்கு வந்தார். அவரை உள்ளே விட மேனேஜர் கணேசன் மறுத்தார். ஆனால் விகேஷ் நான் ராஜேஷைப் பார்க்க வந்துள்ளேன் என்று கூறி கணேசனை தள்ளிவிட்டு மாடியில் ஏறினார்.
ஏதோ விபரீதம் நடக்கப்போகிறது என்று நினைத்த கணேசன் விகேஷைத் தொடர்ந்து சென்றார். கணேசன் கால் ஊனமுற்றவர் என்பதால் அவர் மாடிப்படி ஏறுவதற்குள் விகேஷ் ராஜேஷின் அறைக்கு சென்று அவரைத் தாக்கினார். தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் ராஜேஷை வெறித்தனமாக பல இடங்களில் குத்தினார். ராஜேஷின் மார்புக்கு கீழும், இடுப்புக்கு மேலும் மட்டும் 20 இடங்களில் கத்திகுத்து விழுந்தது. அவரின் வயிறு, மார்புப் பகுதிகளிலும் கத்தியால் குத்தினார் விகேஷ். இதில் அறை முழுவதும் ரத்தம் பீச்சி அடித்தது.
இதில் ராஜேஷ் ரத்த வெள்ளத்தில் உயிர் இழந்தார். உடனே விகேஷ் தப்பிச் செல்ல முயன்றார். ஆனால் அதற்குள் பக்கத்து அறைகளில் இருந்தவர்களும், கணேசனும் அங்கு வந்து விகேஷை அந்த அறையிலேயே வைத்துப் பூட்டி போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.
போலீசார் வந்து விகேஷைக் கைது செய்து அழைத்துச் சென்றனர். ராஜேஷின் உடல் பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது. ராஜேஷின் நிறுவனத்திற்கும் தகவல் கொடுக்கப்பட்டது.
விசாரணையில் விகேஷ் ராஜேஷை ஏசு நாதர் கொல்லச் சொன்னார் என்று தெரிவித்துள்ளார். அவர் மன நலம் பாதிக்கப்பட்டவராக இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.
ராஜேஷும், விகேஷும் ஒரே அறையில் தங்கியிருந்தபோது அவர்களுக்குள் அடிக்கடி மோதல் ஏற்பட்டுள்ளது. ராஜேஷைப் பழிவாங்க விகேஷ் அவரை பின்லேடன் கூட்டாளி என்று போலீசுக்கு தகவல் கொடுத்தார். போலீசார் ராஜேஷிடம் விசாரணை நடத்திய பிறகு அது பொய் என்று தெரிந்தது.
இதையடு்தது அவர்களுக்குள் மோதல் அதிகமானது. விகேஷும் லாட்ஜைவிட்டு வெளியேற்றப்பட்டார். இந்த முன்பகையால் தான் விகேஷ் ராஜேஷைக் கொன்றிருக்கலாம் என்று போலீசார் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications