ஆளுநர் ரோசய்யா குற்றாலம் வருகை-போலீசார் தீவிர சோதனை
செங்கோட்டை: தமிழக ஆளுநர் குற்றாலம் வருவதை ஓட்டி செங்கோட்டை ரயில்வே ஸ்டேஷன், அரிகராநதி பாலம் உள்பட பல்வேறு பகுதிகளில் வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
குற்றாலத்திற்கு நாளை (10 தேதி) ரோசய்யா வருகிறார். குற்றாலம் சித்தேஸ்வரி பீடத்தின் (மவுனசாமி மடம்) 4வது பீடாதிபதி சித்தேஸ்வரனந்த பாரதி சுவாமி சன்னியாசனம் பெற்று 9 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. இவரது இயற்பெயர் பிரசாதராவ் குலபதி. இவர் ஆந்திர மாநிலம் இந்து கல்லூரி முதல்வராக இருந்தார். சுவாமியின் வாழ்க்கை வரலாற்றை புத்தேரி வெங்கடேஸ்வரராவ் "எட்டி குலபதி' என்ற தலைப்பில் எழுதியுள்ளார்.
சித்தேஸ்வரனந்த பாரதி சுவாமி சன்னியாசனம் பெற்று 9 ஆண்டுகள் நிறைவு பெற்று 10ம் ஆண்டு துவக்க நாள் விழா பட்டாபிஷேக ரத்னாசேவம் மற்றும் அவரது வாழ்க்கை வரலாற்று புத்தகமான "எட்டி குலபதி' வெளியீட்டு விழாவாக நாளை (10ம் தேதி) குற்றாலம் மவுனசாமி மடத்தில் நடக்கிறது.
விழாவில் தமிழக ஆளுநர் ரோசய்யா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு புத்தகத்தை வெளியிடுகிறார். தென்காசி எம்.எல்.ஏ.,வும் ச.ம.க.தலைவருமான சரத்குமார் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொள்கிறார்.
குற்றாலம் மவுனசாமி மடத்திற்கு ரோசய்யா வருவதை முன்னிட்டு அப்பகுதியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது. வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை நடத்தினர். போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மவுனசாமி மடத்தில் நடக்கும் விழாவிற்கு முன்னதாக குற்றாலம் பராசக்தி மகளிர் கல்லூரியில் நடக்கும் நிகழ்ச்சியில் கவர்னர் ரோசய்யா கலந்து கொள்கிறார்.
பாதுகாப்பு அதிகரிப்பு
சென்னை-செங்கோட்டை பொதிகை ரயில் மூலம் ரோசய்யா நாளை செங்கோட்டை வருகிறார். செங்கோட்டை ரயில்வே ஸ்டேசனில் இருந்து காரில் குற்றாலம் செல்கிறார்.
இதனையொட்டி போலீசார் தீவிர கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். நேற்று வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் செங்கோட்டை ரயில்வே ஸ்டேஷன், ஹரிகர நதி பாலம், மற்றும் முக்கிய இடங்களில் சோதனை நடத்தினர்.












Click it and Unblock the Notifications