2வது மனைவி கொடுத்த புகார்- அமைச்சர் பரஞ்சோதி மீது 6 பிரிவுகளில் வழக்கு- கைதாவாரா?
திருச்சி: தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பரஞ்சோதி மீது 6 பிரிவுகளில் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். அவரது இரண்டாவது மனைவி டாக்டர் ராணி கொடுத்த புகாரின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
திருச்சி உறையூர் குமரன் நகரைச் சேர்ந்தவர் டாக்டர் டி. ராணி இவர் கடந்த சில மாதங்களுக்கு முன் அமைச்சர் பரஞ்சோதி மீது திருச்சி போலீசில் மோசடி புகார் அளித்தார்.
அதில் தன்னைத் திருமணம் செய்து, பல லட்சம் ரொக்கம் மற்றும் நகைகளை வாங்கிக் கொண்டு ஏமாற்றியதாகவும், தற்போது மிரட்டல் விடுப்பதாகவும் தெரிவித்திருந்தார். அந்த புகாரின் மீது நடவடிக்கை எடுக்கப்படாததை அடுத்து குற்றவியல் நடுவர் மன்றம் எண் - 4-ன் மீண்டும் புகார் மனு அளித்தார். அதனை விசாரித்த குற்றவியல் நடுவர் மன்றம் நீதிபதி புஷ்பராணி, பரஞ்சோதி மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்ய உத்தரவிட்டார்.
6 பிரிவுகளில் வழக்குப் பதிவு
இதனையடுத்து பரஞ்சோதி மீது இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 294 (பி) (தகாத சொற்களால் திட்டுவது), 323 (அடித்தல்), 406 (பொருள்களை வாங்கிக் கொண்டு ஏமாற்றுதல்), 420 (நம்பிக்கை மோசடி செய்தல்), 493 (சட்டப்படி திருமணம் செய்து கொண்டு வாழ மறுப்பது), 506 (2) (கொலை மிரட்டல் விடுப்பது). மேலும், பெண்கள் மீதான வன்முறைத் தடுப்புச் சட்டம் ஆகிய 6 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
பரஞ்சோதியின் ஓட்டுநர்கள் சம்பத் (25), குமார் (27) ஆகியோர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. முதல் தகவல் அறிக்கையின் நகல் திருச்சி குற்றவியல் நடுவர் மன்றத்தில் வியாழக்கிழமை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் விரைவில் கைது செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
டிஸ்மிஸ் ஆவாரா?
திருச்சி மேற்குத் தொகுதியில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து பரஞ்சோதிக்கு அமைச்சர் பதவியைக் கொடுத்தார் முதல்வர் ஜெயலலிதா. தற்போது பரஞ்சோதி மீது கொலை மிரட்டல் உள்ளிட்ட 6 பிரிவுகளில் வழக்குத் தொடரப்பட்டிருப்பதால் பரஞ்சோதி டிஸ்மிஸ் ஆகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications