கள்ளக்காதல்: திருப்பூரில் 3 மகளுடன் தாய் தற்கொலை
திருப்பூர்: கள்ளக் காதலை கேலி செய்ததால் மனமுடைந்த தாய், 3 மகளுடன் சாப்பாட்டில் விஷம் வைத்து சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
ஈரோடு மாவட்டம், கவுந்தப்பாடியை சேர்ந்தவர் ரமேஷ். இவருக்கு கெளரி என்ற மனைவியும், யமுனா, செல்வி, ரம்யா என்ற 3 பெண் குழந்தைகளும் இருந்தனர். பள்ளியில் படித்து வந்த 3 பெண் குழந்தைகளும், பொள்ளாச்சி உள்ள அரசு விடுதியில் தங்கி இருந்தனர்.
இந்த நிலையில் கடந்த 3 மாதங்களுக்கு முன் ரமேஷிடம் இருந்து பிரிந்த கெளரி திருப்பூருக்கு வந்தார். திருப்பூர், பெரிச்சிப்பாளையம் அண்ணமார் காலனியில் உள்ள வாடகை வீட்டில் தங்கி இருந்தார். பொள்ளாச்சி விடுதியில் இருந்த 3 சிறுமிகளையும் நேற்றுமுன்தினம் இரவு வீட்டிற்கு அழைத்தார்.
வீட்டில் இரவு சாப்பிட்டில் விஷம் வைத்து 3 பேருக்கும் சாப்பிட வைத்து, தானும் சாப்பிட்டார். அதில் 4 பேரும் சிறிது நேரத்தில் மயக்கமடைந்து இறந்தனர். நேற்று மாலை வரை கெளரி தங்கியிருந்த வீடு திறக்கப்படாமல் இருந்ததால், சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் சந்தேகமடைந்தனர்.
வீட்டு ஜன்னல் வழியாக பார்த்த போது, 4 பேரும் இறந்து கிடந்தது தெரிந்தது. இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், 4 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர்.
இதில் கெளரி தனது திருமணத்திற்கு முன் காதலித்து வந்த ஒருவருடன் கள்ளத் தொடர்பு இருந்தது தெரிந்தது. மேலும் இந்த கள்ளக்காதலை அறிந்த ரமேஷ், கெளரியிடம் இருந்து பிரிந்து சென்றார்.
இதனால் திருப்பூருக்கு வந்த கெளரி, தனது கள்ளக்காதலனுடன் வாழ்ந்து வந்துள்ளார். இது குறித்து உறவினர்கள் தொடர்ந்து கிண்டல், கேலி செய்து வந்ததால் கெளரி மனமுடைந்தார். இதில் அவமானம் தாங்க முடியாமல் 3 மகள்களுக்கும் விஷம் கொடுத்து, தானும் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது.
தற்கொலை செய்து கொள்ளும் முன் கெளரி எழுதி வைத்த கடிதத்தை போலீசார் கைப்பற்றினர்.
அந்த கடிதத்தில், "அப்பா, அம்மா, உறவினர்கள் உள்ளிட்டோர் என்ன சொன்னாலும் சரி, நாங்கள் 2 பேரும் அடுத்த ஜென்மத்திலாவது இணை பிரியாமல் இருக்க இறைவனை பிரார்த்திக்கிறேன். எனது இறப்பிற்கு யாரும் காரணம் அல்ல," என்று அந்த எழுதி வைத்திருந்தார்.