முல்லைப் பெரியாறு அணைக்கு சிஆர்பிஎப் பாதுகாப்பு:பிரதமரிடம் தமிழக காங்.எம்.பி.க்கள் வலியுறுத்தல்
டெல்லி: முல்லைப் பெரியாறு அணைக்கு மத்திய ரிசர்வ் போலீஸ் பாதுகாப்பு போட வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் எம்.பி.க்கள் பிரதமர் மன்மோகன் சிங்கை நேரில் சந்தித்து வலியுறுத்தியுள்ளனர்.
முல்லைப் பெரியாறு அணை பிரச்சனை பெரிதாகிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் அணைக்கு மத்திய ரிசர்வ் போலீஸ் பாதுகாப்பு போட வேண்டும் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா, திமுக தலைவர் கருணாநிதி,மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மற்றும் பிற அரசியல் கட்சித் தலைவர்கள் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தனர்.தற்போது தமிழக காங்கிரஸ் எம்.பி.க்களும் அணைக்கு மத்திய ரிசர்வ் போலீஸ் பாதுகாப்பு கோரியுள்ளனர்.
மேலும், திமுக, அதிமுக, வைகோவைத் தொடர்ந்து தமிழக காங்கிரஸ் எம்.பி.க்கள் பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து முல்லைப் பெரியாறு அணை பிரச்சனை பற்றி பேசினர். அப்போது அவர்கள், பெரியாறு அணையில் மத்திய ரிசர்வ் போலீஸ் பாதுகாப்பு போட வேண்டும். அணையின் நீர்மட்டத்தை 142 அடி வரை உயர்த்துவதை உறுதி செய்ய வேண்டும். கூடங்குளம் அணுமின் நிலையத்தை உடனடியாகத் துவங்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.
இந்த சந்திப்புக்கு பிறகு செய்தியாளர்களிடம் எம்.பி.க்கள் கூறியதாவது,
முல்லைப் பெரியாறு அணை பிரச்சனை பேச்சுவார்த்தை மூலம் சுமூகமாக தீர்க்கப்படும். இரு மாநிலங்களுக்கிடையே பேச்சுவார்த்தை நடத்த முயற்சி மேற்கொள்ளப்படும். அடுத்த தடவை நடத்தப்படும் பேச்சுவார்த்தையிலாவது தமிழகம் கலந்துகொள்ள வேண்டும். இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பே இறுதியானது என்று பிரதமர் மன்மோகன் சிங் கூறியதாக அவர்கள் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications