காஷ்மீர் பிரிவினை தொடர்பாக இந்திய அமைச்சர்களிடம் பேசியுள்ளேன்- குலாம் நபி ஃபய் அதிர்ச்சி தகவல்

காஷ்மீர் பிரிவினை
காஷ்மீரை சேர்ந்த குலாம் நபி பய், கடந்த 1980 ஆம் இந்தியாவை விட்டு வெளியேறினார். அமெரிக்கா சென்ற அவர் காஷ்மீர் விடுதலைக்கான இயக்கத்தை வாஷிங்டனில் நடத்தி வருகிறார். காஷ்மீர் - அமெரிக்கன் கவுன்சில் என்ற அமைப்பை நடத்தி வரும் இவர், காஷ்மீருக்கு ஆதரவாக அமெரிக்காவை பேச வைக்க, பாகிஸ்தான் உளவு அமைப்பின் உதவியுடன் செயல்பட்டு வந்தார். காஷ்மீர் விடுதலை குறித்த மாநாட்டை ஏற்பாடு செய்து, அதற்கு அமெரிக்க எம்.பி.,க்களை அழைத்து, காஷ்மீருக்கு ஆதரவாக பேச வைப்பதற்காக, பாகிஸ்தான் உளவு அமைப்பு இவருக்கு, 18 கோடி ரூபாய் பணம் கொடுத்தது.
அமெரிக்காவிலிருந்து கொண்டு, பாகிஸ்தான் உளவு அமைப்புடன் சேர்ந்து செயல்பட்டதற்காகவும், எம்.பி.,க்களுக்கு பணம் கொடுக்க முயன்றதற்காகவும், இவரை அமெரிக்க புலனாய்வு நிறுவனம் எப்.பி.ஐ.,கைது செய்துள்ளது. இவர் மீதான விசாரணை வர்ஜினியா மாகாணத்தில் உள்ள அலெச்சாண்டிரியா கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. விசாரணையின் போது பல அதிர்ச்சி தகவல்களை வெளியிட்டுள்ளார்.
இந்திய அமைச்சர்களுடன் பேச்சு
காஷ்மீர் எனக்கு ஏன் முக்கியமானதாக இருக்கிறது என்பது குறித்து இந்திய தூதர், ஐநா பொதுச்செயலாளர் மறைந்த அயூப் தக்கெர், சர்வதேச காஷ்மீர் சுதந்திர இயக்கம், மேலும் சந்திரசேகர், நரசிம்மராவ்,அடல்பிகாரிவாஜ்பாஜ், மற்றும் மன்மோகன்சிங் தலைமையிலான அமைச்சரவையில் உள்ள அமைச்சர்களுடன் சந்தித்து பேசியுள்ளதாக ஃபயி தெரிவித்துள்ளார்.
கடந்த வாரம் வர்ஜினியா நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையின் போதும் இந்தியா தூதரகம் மூலம் கடந்த 11 ஆண்டுகளாக பல்வேறு துறை அதிகாரிகளை சந்தித்து பேசியதாகவும் கூறியிருந்தார். கடந்த ஜூலை 18 மற்றும் 19 ம் தேதியும் இந்திய தூதரகத்தில் முக்கிய நபர்களை சந்தித்து பேச இருந்த போது தான் கைது செய்யப்பட்டதாகவும் குலாம் நபி ஃபய் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மத்திய அரசு மறுப்பு
இதனிடையே அமைச்சர்கள் சந்தித்து பேசியதாக கூறியிருப்பது பெரும் புயலை கிளப்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
குலாம் நபி ஃபய்யின் கருத்துக்களை மத்திய அரசு ஏற்க மறுத்துவிட்டது. பொய்யான தகவல்களுக்கெல்லாம் பதிலளிக்க முடியாது என்றும் மத்திய அரசு கூறியுள்ளது.












Click it and Unblock the Notifications