அசாஞ்சே கருப்புப் பண முதலைகள் பெயரை வெளியிடட்டும் என்று அரசு காத்திருக்கிறதா? அத்வானி கேள்வி
கருப்புப் பண விவகாரம் தொடர்பாக லோக்சபாவில் ஓட்டெடுப்புடன் கூடிய ஒத்திவைப்புத் தீர்மானம் மீதான விவாதம் இன்று நடந்தது. அதில் கலந்து கொண்டு அத்வானி பேசுகையில்,
கருப்புப் பணம் அல்லது வெளியிடப்படாமல் பதுக்கி வைக்கப்பட்டுள்ள பண விவகாரத்தில் மத்திய அரசு மென்மையாகவே நடந்து வருகிறது. கருப்புப் பணத்தைப் பதுக்கி வைத்துள்ள 782 வரி ஏய்ப்பாளர்கள் குறித்த விவரங்களை அது வெளியிட மறுக்கிறது. இந்தப் பட்டியலை சமீபத்தில் பிரெஞ்சு அரசு இந்தியாவிடம் கொடுத்தது. இவர்கள் ஸ்விஸ் வங்கியில் பணத்தைப் பதுக்கி வைததுள்ளனர்.
விக்கிலீக்ஸ் வந்து, அதன் அதிபர் அசாஞ்சே வந்து இந்தப் பெயர்களை அறிவிக்க வேண்டும் என்று மத்திய அரசு நினைத்தால், காத்திருந்தால் அது நாம் எல்லோருக்கும் மிகப் பெரிய அவமானமாகும். கிட்டத்தட்ட ரூ. 25 லட்சம் கோடி பணம் ஸ்விஸ் வங்கிகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ளது. இந்த விவரங்களை பிரதமரும், நிதியமைச்சரும் நாடாளுமன்றத்தில் பகிரங்கமாக தெரிவிக்க வேண்டும் என்றார் அத்வானி.
பல்வேறு கட்சிகளின் எம்.பிக்களும் விவாதத்தில் கலந்து கொண்டு பேசினர். இறுதியில், நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி பதிலளித்தார்.