குழந்தைகளுக்கு 5 தடுப்பூசிகளுக்கு பதிலாக ஒரே தடுப்பூசி போடும் முறை - தமிழகத்தில் நாளை அறிமுகம்
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,
இந்தியாவில் சுகாதாரம், குடும்ப நல திட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் தமிழகம் முன்னோடி மாநிலமாக திகழ்கிறது. தமிழகத்தில் ஆண்டுதோறும் சுமார் 11 லட்சம் பிறந்த குழந்தைகளுக்கு தேசிய தடுப்பூசி திட்டத்தின் கீழ் பிசிஜி, ஓபிவி, டிபிடி, தட்டம்மை, மஞ்சள் காமாலை தடுப்பு உள்ளிட்ட 5 வகையான தடுப்பூசிகள் வழங்கப்படுகின்றன.
இந்த தடுப்பூசிகளின் மூலம் குழந்தைகளுக்கு காசநோய், இளம்பிள்ளைவாதம், தொண்டை அடைப்பான், கக்குவான் இருமல், ரணஜன்னி, மஞ்சள் காமாலை-பி, தட்டம்மை உள்ளிட்ட உயிர்க்கொல்லி நோய்களில் இருந்து பாதுகாப்பு கிடைக்கிறது.
கடந்த 30 ஆண்டுகளாக தடுப்பூசித் திட்டத்தில் தமிழகம் சிறப்பாக செயல்பட்டதால், கடந்த 7 ஆண்டுகளாக போலியோ, தொண்டை அடைப்பான், கக்குவான் இருமல், ரண ஜன்னி உள்ளிட்ட நோய்களின் தாக்கம் தமிழகத்தில் ஏற்படவில்லை. தட்டம்மை பாதிப்பும் வெகுவாக குறைந்து உள்ளது.
தமிழகத்தில் சுகாதாரத்திற்கான சிறந்த உள்கட்டமைப்பு இருப்பதால், தடுப்பூசி திட்டத்தை செயல்படுத்துவதில் சிறந்த மாநிலமாக திகழ்வதாலும், மத்திய அரசு பெண்டாவேலண்ட் தடுப்பூசியை அறிமுகப்படுத்த தமிழகத்தை தேர்வு செய்துள்ளது.
ஏற்கனவே தடுப்பூசி திட்டத்தில் வழங்கப்படும் டிபிடி, மஞ்சள் காமாலை-பி தடுப்பூசிகளுடன் எச்ஐபி சேர்க்கப்பட்டு பெண்டாவேலண்ட என்ற ஒரே தடுப்பூசியாக தற்போது வழங்கப்பட உள்ளது.
6வது, 10வது, 14வது வாரங்களில் 3 தவணைகளாக குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து உடன் இந்த தடுப்பூசி கொடுக்க வேண்டும். டிசம்பர் மாதத்தில் இருந்து டிபிடி முதல் தவணை தடுப்பூசி போட தகுதி உள்ள 11.5 மாத குழந்தைகளுக்கு மட்டுமே பெண்டாவேலண்ட் தடுப்பூசி போடப்படும்.
பெண்டாவேலண்ட் தடுப்பூசி தொண்ட அடைப்பான், கக்குவான் இருமல், ரணஜன்னி, மஞ்சள் காமாலை-பி, நிமோனியா, மூளைப் பாதிப்பு உள்ளிட்ட 5 உயிர்க் கொல்லி நோய்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கிறது. மேலும் புதிதாக சேர்க்கப்பட்டுள்ள எச்ஐபி தடுப்பூசி, 5 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு ஏற்படும் நிமோனியா மற்றும் மூளை பாதிப்பை குறைக்கிறது.
இந்த திட்டத்தின் மூலம் 2011-12ல் 3.60 லட்சம் குழந்தைகள் பயன்பெறுவர். வருங்காலத்தில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 11 லட்சம் குழந்தைகளுக்கு 3 தவணைகளாக பெண்டாவேலண்ட் தடுப்பூசி போடப்பட்டு, பயன் பெறுவார்கள்.
இந்த திட்டத்திற்கான துவக்க விழா நாளை(டிசம்பர் 17) காலை 10 மணிக்கு வேலூரில் உள்ள அலமேலுமங்காபுரம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடைபெற உள்ளது என்று அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.