ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் மீண்டும் அஜீத் சிங்-மத்திய அமைச்சரானார்
டெல்லி: உ.பி. தேர்தலில் ஆதாயத்தை மனதில் கொண்டு உ.பியில் ஓரளவு செல்வாக்குடன் திகழும் அஜீத் சிங்கை காங்கிரஸ் கட்சி, ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக்குள் இழுத்து அவருக்கு மத்திய அமைச்சர் பதவியைக் கொடுத்துள்ளது. இன்று அஜீத் சிங்மத்திய அமைச்சராக பதவியேற்றுக் கொண்டார்.
குடியரசுத் தலைவர் மாளிகையில் இன்று நடந்த எளிய நிகழ்ச்சியில் அஜீத் சிங் புதிய அமைச்ச்சராக பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, அமைச்சர்கள் உள்ளிட்டோர் இதில் கலந்து கொண்டனர். அஜீத் சிங்கின் ராஷ்டிரிய லோக் தளம் கட்சிக்கு லோக்சபாவில் அவரது மகன் ஜெயந்த் செளத்ரி உள்பட 5 எம்.பிக்கள் உள்ளனர்.
சிவில் விமானப் போக்குவரத்துத் துறை அஜீத் சிங்குக்கு வழங்கப்படுகிறது. உத்தரப் பிரதேசத்தில் நடைபெறவுள்ள சட்டசபை பொதுத் தேர்தலில் ஆதரவு திரட்டி வருகிறது காங்கிரஸ். மேற்கு உ.பியில் அஜீத் சிங்குக்கு ஓரளவு செல்வாக்கு உள்ளதால், அதை மனதில் கொண்டு தற்போது அவருக்கு அமைச்சர் பதவியைத் தூக்கிப் போட்டு உள்ளே இழுத்துள்ளது.