பகவத் கீதை தேசிய நூலாக்க வேண்டும்: பாஜக கோரிக்கை
டெல்லி: பகவத் கீதை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும் என்று பாஜக தலைவர் சுஷ்மா ஸ்வராஜ் கோரிக்கை விடுத்துள்ளார்.
பகவத் கீதையை தடைசெய்ய கோரி ரஷ்யாவின் சைபீரிய பகுதியில் வழக்கு தொடரப்பட்டுள்ளதற்கு அந்நாட்டு அதிகாரிகளிடம் இந்தியா தனது கவலையை தெரிவித்துள்ளது. இது குறித்து வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். அப்போது அவர் கூறியதாவது,
இந்த விவகாரத்தில் இந்திய தூதரகம் தலையிட்டுள்ளது. மாஸ்கோவில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் இந்த வழக்கு தொடர்பாக வழக்கறிஞர்களை அவ்வப்போது அணுகி வருகின்றனர். ரஷ்யாவில் உள்ள யாரோ அறியா நபர் இந்த புகார் கொடுத்துள்ளதாகத் தெரிகிறது.
இந்தியாவுக்கான ரஷ்ய தூதர் அலெக்சாண்டர் எம். கடாகின் உள்பட பல ரஷ்ய நிபுணர்கள் பகவத் கீதைப் படித்து புரிந்து கொண்டுள்ளனர். மேலும் அந்த நூல் பற்றி மதிப்பாக எழுதியுள்ளனர் என்றார்.
உடனே பாஜக தலைவரும், எதிர்கட்சித் தலைவருமான சுஷ்மா ஸ்வராஜ் எழுந்து, ரஷ்யாவில் பகவத் கீதையை தடைசெய்வதை தடுத்து நிறுத்த வேண்டும். மேலும் இந்தியாவில் கீதையை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும் என்றார்.
இதற்கிடையே இந்த வழக்கில், வரும் 28ம் தேதி தீர்ப்பளிப்பதாக டாம்ஸ்க் நீதிமன்றம் அறிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications