டெல்லியில் இருந்து சென்னை வந்த தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலில் இலங்கை நபர் உடல் மீட்பு
டெல்லி: டெல்லியில் இருந்து வந்த தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலில் இலங்கை நபர் இறந்த நிலையில் மீட்கப்பட்டார். இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
டெல்லியில் இருந்து சென்னைக்கு வரும் தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று காலையில் போபால் ரயில் நிலையம் வந்து சேர்ந்தது. அப்போது அந்த ரயிலின் தூங்கும் வசதிக் கொண்ட முன்பதிவுப் பெட்டி ஒன்றில் ஒருவர் இறந்து கிடப்பது தெரிய வந்தது. இது குறித்து தகவல் அறிந்த ரயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்.
ரயில் பெட்டியில் பிணமாக கிடந்தவரின் உடலில் எந்த காயமும் இருக்கவில்லை. இறந்த உடல் அருகே பாஸ்போர்ட்டும், ரயில் டிக்கெட் உள்ளிட்டவை போலீசாரால் கைப்பற்றப்பட்டன.
அந்த பாஸ்போர்ட் மூலம் இறந்த நபர் இலங்கையை சேர்ந்தவர் என்பதும், அவரது பெயர் வர்னகுல பெனாண்டோ என்றும் தெரிய வந்தது. பிணத்தை கைப்பற்றிய போலீசார், பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் அந்த நபர் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.