அணைக்காக உயிர் நீத்த ஜெயப்பிரகாஷ் நாராயணன் குடும்பத்தினருக்கு அதிமுக ரூ.1லட்சம் நிதியுதவி
தேனி: முல்லைப் பெரியாறு அணைக்காக தனது உயிரை மாய்த்துக் கொண்ட ஜெயப்பிரகாஷ் நாராயணன் குடும்பத்தினருக்கு அதிமுக சார்பில் ரூ.1லட்சம் நிதி வழங்கப்பட்டது.
மதுரை சாலை சுந்தரம் சேர்வை லைன் பகுதியில் வசித்தவர் சண்முக சுந்தரம். அவருடைய மனைவி சண்முகத்தாய். அவர்களுக்கு சீனிவாசன், சரவணன், பாலு, ஜெயப்பிரகாஷ் நாராயணன்(31) என்ற 4 மகன்களும், வசந்தி, சாந்தி, சந்திரா என்ற 3 மகள்களும் உள்ளனர்.
சண்முகசுந்தரம் இப்போது உயிருடன் இல்லை. மேலும் சமீபத்தில் பாலுவும் இறந்துவிட்டார். ஜெயப்பிரகாஷ் நாராயணன் தவிர மற்றவர்களுக்கு எல்லாம் திருமணம் ஆகிவிட்டது. இதனால் ஜெயப்பிரகாஷ் தனது தாயுடன் வசித்து வந்தார். தேனியில் உள்ள தனியார் டிராவல்ஸ் நிறுவனம் ஒன்றில் டிரைவராக இருந்தார். கடந்த மாதம் 19ம் தேதி மாலை 4 மணி அளவில் அவர் தேனி நேரு சிலை உள்ள இடத்திற்கு வந்தார். தான் கையில் வைத்திருந்த பெட்ரோல் கேனைத் திறந்து அதில் இருந்த பெட்ரோலை தன் மீது ஊற்றி தீ வைத்தார். அவரது உடலில் தீப்பிடித்தவுடன் வேதனை தாங்காமல் அலறினார்.
அவரது அலறல் சத்தம் கேட்டு வந்த தேனி நகர போலீசார் அவரை மீட்டு தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அப்போது அவர் முல்லைப் பெரியாறு பிரச்சனைக்கு தீர்வு காணக்கோரி தான் தீக்குளித்ததாக தெரிவித்தார். அவருக்கு 90 சதவீத தீக்காயம் ஏற்பட்டிருந்ததால் மேல் சிகிச்சைக்காக மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இநநிலையில் அவர் சிகிச்சை பலனின்றி கடந்த 1ம் தேதி இரவு உயிர் இழந்தார்.
இதனை அறிந்த முதல்வர் ஜெயலலிதா ஜெயப்பிரகாஷ் நாராயணன் குடும்பத்தினருக்கு அதிமுக சார்பில் ரூ.1லட்சம் நிதி வழங்க உத்தரவிட்டார். இதனையடுத்து, நிதி அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் ஜெயப்பிரகாஷ் நாராயணன் குடும்பத்தினருக்கு தேனியில் அந்த நிதியை வழங்கினார்.
அப்போது தேனி மாவட்ட செயலாளரும் மற்றும் கம்பம் நகர் மன்றத் தலைவருமான சிவக்குமார், தேனி நகர் மன்றத் தலைவர் முருகேசன், மாவட்ட ஊராட்சித் தலைவர் மகாலிங்கம் உள்பட பலர் உடன் இருந்தனர்.












Click it and Unblock the Notifications