விஏஒக்களுக்கு 4 வாரத்திற்குள் பணி ஆணை வழங்க அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு
சென்னை: தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து கிராம நிர்வாக அதிகாரிகளுக்கும் நான்கு வாரங்களுக்குள் பணி ஆணைகளை வழங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் எஸ்.சி., எஸ்.டி. வகுப்பினருக்கான காலியாக உள்ள 1,077 வி.ஏ.ஓ. பின்னடைவுப் பணியிடங்களை நிரப்புவது தொடர்பான அறிவிப்பாணையை 21.7.10 அன்று தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டது.
இதை எதிர்த்து கே.ராதா உட்பட 6 பேர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அதில், இந்த பணியிடங்களில் 2,500 பேரை 2007 - 08 ம் ஆண்டில் அரசு நியமித்தது. அதன் பின்னர் எஸ்.சி., எஸ்.டி.யினரின் பணியிடம் வெறும் 197 ஆகத்தான் உள்ளது. ஆனால் 1,077 பின்னடைவு பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்று அறிவிப்பாணை தவறாக வெளியிடப்பட்டுள்ளது. எனவே அந்த அறிவிப்பாணையை ரத்து செய்ய வேண்டுமென்று அவர்கள் தங்களது மனுவில் கூறியிருந்தனர்.
இதைத் தொடர்ந்து வி.ஏ.ஓ. பணியிடங்கள் சம்பந்தப்பட்ட அனைத்து விவரங்களையும் தாக்கல் செய்யும்படி தமிழக அரசுக்கு, உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. அதைத்தொடர்ந்து அந்த விவகாரங்களை அரசு தாக்கல் செய்தது.
4 வாரங்களுக்கு பணி ஆணை
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கே.சுகுணா பிறப்பித்த உத்தரவு வருமாறு:
எண்ணிக்கையில் இருக்கும் குறைபாடுகள் பற்றி பின்னர் முடிவு செய்யலாம். அந்த எண்ணிக்கை அதிகமா, குறைவா என்பதை இறுதி கட்டத்தில் முடிவு செய்யலாம். அதிக அளவில் வி.ஏ.ஓ.க்கள் நியமிக்கப்பட்டால், அதை எதிர்காலத்தில் சரிசெய்து கொள்ளலாம்.
எனவே வி.ஏ.ஓ.பணிக்கு தேர்வு செய்யப்பட்டவர்கள் அனைவருக்கும் பணி ஆணைகளை வழங்க வேண்டும். இன்னும் 4 வாரத்துக்குள் அவற்றை அரசு அனுப்ப வேண்டும். ஊரக வளர்ச்சித்துறையின் பணிகளை இவர்கள்தான் செய்ய வேண்டும். இது முக்கியமான பணி. இவர்களின் நியமனத்துக்கு இதுபோன்ற காரணங்கள் தடையாக இருக்கக்கூடாது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.