ஒரே நாளில் பறிபோன சென்னை வியாபாரியின் வாழ்நாள் சேமிப்பு..15 சவரன் தங்க நகை..தூக்கத்தை தொலைத்த போலீஸ்
சென்னை: பிசினஸ்மேன் முதல் வியாபாரிகள் வரை நிலைமை பரிதாபம்தான்.. தமிழகத்தின் தலைநகரான சென்னையில் கடந்த 24 மணி நேரத்திற்குள் நடந்த அடுத்தடுத்த கொள்ளை சம்பவங்கள் போலீசாருக்கும் பொதுமக்களுக்கும் பெரும் சவாலாக மாறியுள்ளன.. இதில் , அன்றாடம் கஷ்டப்பட்டு உழைத்து பிழைப்பு நடத்தும் சிறு வியாபாரிகளையும், பாதுகாப்பற்ற நிலையில் உள்ள முதியவர்களையும் குறிவைத்து இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டிருப்பது மிகுந்த வேதனையை ஏற்படுத்தியுள்ளது. என்ன நடந்தது நேற்று?
புழல் அடுத்த சூரப்பட்டு பகுதியில் தள்ளுவண்டியில் டிபன் கடை நடத்தி வரும் 64 வயதான முதியவர் கோவிந்தராஜ் மீது நடத்தப்பட்ட தாக்குதல் ரொம்பவே கொடூரமானது.

சென்னையில் ஒரே நாளில் சம்பவம்
இவர் ஒரு காலத்தில் தனியார் நிறுவனத்தில் செக்யூரிட்டியாக வேலை பார்த்துள்ளார்.. பிறகு உடல்நிலை குன்றிதால், யாருடைய உதவியையும் எதிர்பார்க்காமல் சுயதொழில் செய்ய விரும்பி, ஒரு தள்ளுவண்டியை நடத்தி வருகிறார். நேற்றைய தினம் வழக்கம்போல வியாபாரத்தில் ஈடுபட்டிருந்தார்.. அப்போது பைக்கில் வந்த இளைஞர்கள், வயிறு முட்ட சாப்பிட்டு முடித்துள்ளனர்..
உணவு சாப்பிட்டு முடித்த பிறகு, அதற்கான பணம் கேட்டுள்ளார் கோவிந்தராஜ்.. உடனே அந்த கும்பல், ஒரு முதியவர் என்றும் பாராமல் அவரை தாக்கிவிட்டு, கல்லாவில் இருந்த மொத்த பணத்தையும் பறித்துக்கொண்டு அவர்கள் தப்பி சென்றுவிட்டது.. இதை பார்த்து கோவிந்தராஜும், அந்தப் பகுதி வியாபாரிகளும் அதிர்ச்சியில் உறைந்தனர்.
வியாபாரியின் காஸ்ட்லி செல்போன்
இதேபோன்ற மற்றொரு சம்பவம் மாதவரம் பால் பண்ணை பகுதியில் அரங்கேறியுள்ளது. மாத்தூர் பகுதியைச் சேர்ந்த ரவிச்சந்திரன் என்ற பழ வியாபாரி, நேற்றிரவு தன்னுடைய வியாபாரத்தை முடித்துவிட்டு,. நள்ளிரவு நேரத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.
மாதவரம் 200 அடி சாலை மேம்பாலம் அருகே அவர் வந்து கொண்டிருந்தபோது, இருட்டில் பதுங்கியிருந்த மர்ம கும்பல் ஒன்று அவரை வழிமறித்துள்ளது. ஒரு வியாபாரி என்று கூடப் பார்க்காமல் அவரைத் தாக்கிய அந்தக் கும்பல், அவரிடமிருந்த விலை காஸ்ட்லி செல்போனை பறித்துக்கொண்டு தப்பியது.
உடனே இதுகுறித்து புகார் அளிக்கவும். இந்த வழக்கில் காவல்துறையினர் துரிதமாகச் செயல்பட்டு, சிசிடிவி காட்சிகளின் உதவியுடன் மணிகண்டன் மற்றும் சூர்யா ஆகிய 2 இளைஞர்களை தற்போது கைது செய்துள்ளனர். பிடிபட்டவர்களிடம் இருந்து ரவிச்சந்திரனின் செல்போனும் மீட்கப்பட்டது.
வாழ்நாள் சேமிப்பு 15 சவரன் தங்க நகை
இதற்கெல்லாம் மேலாக, வில்லிவாக்கம் சிட்கோ நகரில் ஒரு துணிகரத் திருட்டு சம்பவம் காவல்துறையினரையே வியப்பில் ஆழ்த்தியுள்ளது. 74 வயதான கருணாநிதி என்பவர் தனது குடும்பத்துடன் சில நாட்கள் வெளியூர் சென்றிருந்ததை மிகச் சரியாக நோட்டமிட்ட கொள்ளையர்கள், வீட்டின் கதவை உடைத்து உள்ளே நுழைந்துள்ளனர்.
பீரோவில் வைக்கப்பட்டிருந்த 15 சவரன் தங்க நகைகள் மற்றும் ஒரு லட்ச ரூபாய் ரொக்கப் பணத்தை அள்ளிச் சென்றுள்ளனர். வெளியூர் சென்று நேற்று நள்ளிரவில் திரும்பிய முதியவர் கருணாநிதி, தனது வாழ்நாள் சேமிப்பு திருடு போனதைக் கண்டு நிலைகுலைந்து போயுள்ளார். வில்லிவாக்கம் போலீஸார் இந்த வழக்கில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
குறிவைக்கப்படும் முதியவர்கள், வியாபாரிகள்
சென்னையில் ஒரே நாளில் நடந்த இந்த மூன்று வெவ்வேறு கொள்ளை சம்பவங்களும் அந்தந்த பகுதி மக்களை நிலைகுலைய வைத்து வருகின்றன.. அதுமட்டுமல்ல, குற்றவாளிகள் பெரும்பாலும் முதியவர்களையும், இரவு நேரங்களில் தனியாகச் செல்லும் வியாபாரிகளையும் இலக்காக கொண்டிருப்பதும் தெரியவந்துள்ளது..
இது போன்ற செயல்கள் காவல்துறையின் இரவு நேர ரோந்துப் பணிகளின் மீதான நம்பிக்கையை கேள்விக்குறியாக்குகிறது. சமூக விரோதிகள் எவ்வித அச்சமுமின்றி மக்கள் நடமாட்டம் உள்ள பகுதிகளிலேயே கைவரிசை காட்டுவது, இன்னும் தீவிரமான கண்காணிப்பு அவசியம் என்பதை உணர்த்துகிறது.
பிடிபட்ட குற்றவாளிகளிடம் நடத்தப்படும் விசாரணை மற்றும் சிசிடிவி பதிவுகள் மூலம் மற்ற கொள்ளையர்களையும் விரைவில் பிடிப்பதே போலீசாரின் தற்போதைய இலக்காக உள்ளது. இழந்த உடமைகள் மீட்கப்படுமா என்ற ஏக்கத்தில் பாதிக்கப்பட்டவர்கள் காத்திருக்கின்றனர். கடந்த மாதம் இதே சென்னையில், தொழிலதிபர் வீட்டில் நடத்திய கொள்ளை சம்பவத்தின் பரபரப்பு அடங்குவதற்கு முன்பேயே வியாபாரிகளிடம் கைவரிசை ஆரம்பமாகி உள்ளது.. இதுபோன்ற குற்றங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க அரசு கடும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பதே சென்னை மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது...!












Click it and Unblock the Notifications