வானில் தோன்றும் மாயம்.. கடல் நடுவே நாளை அபூர்வ சந்திப்பு! குமரி முனையில் 3 இடத்தில் குவியும் கூட்டம்
சென்னை: தென் இந்தியாவின் நிலமுனையான கன்னியாகுமரியில், பிரமிக்க வைக்கும் வானியல் நிகழ்வு நாளை அரங்கேற உள்ளது. சித்திரை மாதத்தின் சிகரமான சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு, நாளை வெள்ளிக்கிழமை மாலை ஒரே நேரத்தில் சூரியன் மறைவதையும், சந்திரன் உதயமாவதையும் காணும் அந்த அபூர்வ காட்சி அரங்கேறப்போகிறது.
ஒவ்வொரு ஆண்டும் சித்ரா பவுர்ணமி தினத்தில் நிகழும் இந்த இயற்கை நிகழ்வை காண்பது என்பது வாழ்நாளில் ஒருமுறை மட்டுமே கிடைக்கும் பொக்கிஷமான வாய்ப்பாகும்.

கன்னியாகுமரி வங்கக் கடல்
நாளை மாலை சரியாக 6 மணியளவில், கன்னியாகுமரியின் மேற்கு திசையில் உள்ள அரபிக்கடல் பகுதியில் செந்நிறப் பந்து போல சூரியன் மெல்ல மெல்ல கடலுக்குள் மூழ்கி மறையும். அதே நொடியில், அதற்கு நேர் எதிர் திசையான கிழக்கு பகுதியில் உள்ள வங்கக்கடல் அலையிலிருந்து வெண்ணிற ஒளியுடன் சந்திரன் வட்ட வடிவில் மெல்ல மெல்ல மேலே எழும். இதை பார்ப்பதற்கே சூப்பராக இருக்கும்..
இந்த 2 கோள்களும் ஒரே நேர்க்கோட்டில் சந்திப்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தும் இந்த நிகழ்வு நாளை நடக்கிறது.. கன்னியாகுமரியில் உள்ள மிக முக்கியமான 3 இடங்களில் இருந்து மிகத்தெளிவாகப் பார்க்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, மூன்று கடல்களும் சங்கமிக்கும் முக்கடல் சங்கமம் கடற்கரை பகுதி, மாலை நேர அழகை ரசிக்கவே உருவாக்கப்பட்ட சன் செட் பாயிண்ட் மற்றும் உயரமான இடத்தில் அமைந்துள்ள முருகன் குன்றம் ஆகிய பகுதிகள் இந்த காட்சியை ரசிக்க ஏற்ற இடங்களாகும்.
முக்கடல் சங்கமம்
இந்த வருடம் சித்ரா பவுர்ணமி விடுமுறை தினங்களை ஒட்டி வருவதால், உள்ளூர் மக்கள் மட்டுமின்றி, வெளிமாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் கன்னியாகுமரியில் குவிந்த வண்ணம் உள்ளனர்.
முக்கடல் சங்கமத்தில் நாளை மாலை மக்கள் கூட்டம் அலைமோதும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறை சார்பில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
சித்ரா பவுர்ணமி - இயற்கை அதிசயம்
சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யவும், கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்தவும் கடற்கரை ஓரங்களில் கூடுதல் போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக முக்கடல் சங்கமம் மற்றும் திரிவேணி சங்கமப் பகுதிகளில் கடலில் இறங்கி குளிப்பவர்கள் கவனமுடன் இருக்கவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சித்திரை மாத நிலவின் ஒளியும், சூரியனின் அந்தி சாயும் அழகும் ஒன்றாகச் சேரும் அந்த 6 மணி நேரத் தருணத்திற்காக இயற்கை ஆர்வலர்களும், போட்டோ கிராபர்களும் தற்போது கன்னியாகுமரியை நோக்கிப் படையெடுத்து வருகின்றனர். இந்த அரிய நிகழ்வு கன்னியாகுமரியின் சுற்றுலா வரலாற்றில் மீண்டும் ஒரு மகுடமாக அமையும் என்பதில் சந்தேகமில்லை...!!












Click it and Unblock the Notifications