தூத்துக்குடி பெண் டாக்டர் கொலை வழக்கு-இதுவரை 9 பேர் கைது-மேலும் ஒருவருக்கு வலை
தூத்துக்குடி: தூத்துக்குடியைச் சேர்ந்த பெண் டாக்டர் சேதுலட்சுமி கொலை வழக்கில் 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் ஒருவரை போலீஸார் தேடி வருகின்றனர்.
தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி அருகேயுள்ள காமராஜ் நகரைச் சேர்ந்தவர் திருஞானசம்பந்தம் (50). கல்லூரி பேராசிரியர். இவருடைய மனைவி சேதுலட்சுமி (48). இவர், தூத்துக்குடி இ.எஸ்.ஐ. மருந்தகத்தில் தலைமை மருத்துவராகப் பணியாற்றி வந்தார்.
தனது வீட்டையொட்டி கிளினிக் ஒன்றையும் நடத்தி வந்தார் சேதுலட்சுமி. இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள். இருவருமே டாக்டர்கள். மகள் அமெரிக்காவில் உள்ளார்.
இந்த நிலையில், தூத்துக்குடி ஆவுடையார்புரத்தைச் சேர்ந்த ஆட்டோ டிரைவரான மகேஷ் தனது 6 மாத கர்ப்பிணி மனைவியான நித்யாவை டாக்டர் சேதுலட்சுமியிடம் காட்டி வந்துள்ளார்.
கடந்த 30ம் தேதி நித்யாவுக்கு திடீரென கடும் வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. உடனடியாக சேதுலட்சுமி மருத்துவமனைக்குக் கொண்டு வந்தனர். அவரைப் பரிசோதித்தபோது குழந்தை இறந்திருந்தது தெரிய வந்தது. இதையடுத்து அறுவைச் சிகிச்சை செய்து குழந்தையை வெளியே எடுத்துள்ளனர்.
6 மாதக் குழந்தை என்பதால் நித்யாவுக்கும் உடல் நிலை மோசமானது. இதையடுத்து தூத்துக்குடியில் உள்ள இன்னொரு தனியார் மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தார் டாக்டர் சேது லட்சுமி. ஆனால் வழியிலேயே நித்யா இறந்தார்.
இதனால் ஆத்திரமடைந்த மகேஷ் தனது மனைவியின் சாவுக்கு டாக்டர் சேதுலட்சுமி தான் காரணம் என்ற முடிவுக்கு வந்தார். இதையடு்தது அவர் தனது நண்பர்கள் சிலருடன் கடந்த 2ம் தேதி இரவு 10.30 மணி அளவில் சேதுலட்சுமியின் கிளினிக்குக்கு சென்று அவரை சரமாரியாக வெட்டினார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.
இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் கொலையாளிகளை வலைவீசித் தேடி வந்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் மகேஷ், அவரது நண்பர்கள் குருமுத்து(19), ராஜா, அப்பாஸ் ஆகிய 4 பேர் சிக்கினர். விசாரணையில் இந்த கொலையில் மேலும் 5 பேருக்கு தொடர்பு உள்ளது தெரிய வந்தது.
அந்த 5 பேர் தான் கொலையாளிகளை 3 ஆட்டோக்களில் கிளினிக்குக்கு அழைத்து சென்றுள்ளனர். இதையடு்தது தூத்துக்குடி ஆவுடையார்புரத்தைச் சேர்ந்த ஆறுமுகம், வெற்றிவேல் என்ற சாமுண்டி, டூவிபுரத்தைச் சேர்ந்த லட்சுமணன், வெள்ளையன் ஆகிய 4 பேரும் நேற்று கைது செய்யப்பட்டனர்.
தூத்துக்குடி சண்முகபுரத்தைச் சேர்ந்த ஆட்டோ டிரைவரான மாரிமுத்து என்பவர் தலைமறைவாக இருந்தார். இந்நிலையில் இன்று அவரையும் போலீசார் கைது செய்தனர்.
மாரிமுத்துவையும் சேர்த்து இந்த வழக்கில் மொத்தம் 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் ஒருவரையும் போலீஸார் தேடி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.