ராமேஸ்வரத்தில் டாஸ்மாக் கடை போர்டுக்கு தீவைத்து பெண்கள் போராட்டம்
ராமேஸ்வரம்: ராமேஸ்வரத்தில் மருத்துவமனை மற்றும் வீடுகள் உள்ள பகுதியில் உள்ள டாஸ்மாக் மதுக்கடையை அப்பகுதி பெண்கள் இழுத்துப் பூட்டி பெயர் பலகைக்கு தீ வைத்தனர்.
ராமேஸ்வரம் மேற்கு ரத வீதி அருகே உள்ள நடுத்தெரு பகுதியில் டாஸ்மாக் கடையும், பாரும் இருந்தது. அந்த கடையை வேறு ஒரு இடத்திற்கு மாற்ற நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி மாவட்ட நிர்வாகம் அந்த கடையை மாற்ற கிழக்கு கடைத்தெருவில் இடத்தை தேர்வு செய்தது.
அது மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள தெரு என்பதால் டாஸ்மாக் கடையை அங்கு திறக்க பொது மக்கள், வர்த்தக சங்கத்தினர் மற்றும் அனைத்து கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அதனால் அங்கு கடை திறக்கப்படமாட்டாது என்று தாசில்தார் உறுதியளித்தார்.
இதையடுத்து ராமர் பாதம் செல்லும் வழியில் சவுந்திரியம்மன் கோவில் தெருவில் நேற்று டாஸ்மாக் கடை திறக்கப்பட்டது.அந்த கடைக்கு அருகே மருத்துவமனையும், ஏராளமான வீடுகளும் உள்ளன. இது தவிர பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ, மாணவியர் அந்த வழியாகத் தான் செல்ல வேண்டும். இதனால் அப்பகுதியைச் சேர்ந்த சுமார் 50க்கும் மேற்பட்ட ஆண்களும், பெண்களும் ஒன்று சேர்ந்து டாஸ்மாக் கடையை மூடக்கோரி முற்றுகை போராட்டம் நடத்தினர். இதையடுத்து கடை ஊழியர்கள் கடையை மூடினர்.
அதன் பிறகு அப்பகுதி பெண்கள் கடையின் வெளிவாயில் கதவை இழுத்துப்பூட்டி பெயர் பலகையை உடைத்து தீ வைத்து எரித்தனர். பிறகு அவர்கள் தாலுகா அலுவலகம் சென்று தாசில்தாரிடம் மனு ஒன்றை கொடுத்தனர். அங்கு மதுக்கடை செயல்படத் துவங்கியுள்ளதால் உடனே அதை வேறு இடத்திற்கு மாற்றுவது கடினம். அதற்கு கால அவகாசம் தேவை. அதனால் அதுவரை போராட்டம் நடத்தாமல் பொறுமையாக இருக்க வேண்டும் என்று தாசில்தார் அவர்களைக் கேட்டுக் கொண்டார்.
அதற்கு அவர்கள் சம்மதிக்காததால் அந்த கடை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.