தாம்பரம், ராயபுரம் ரயில் நிலையங்களை முனையங்களாக்குக: ரயில்வே வாரியத்திற்கு டி.ஆர். பாலு கடிதம்
சென்னை: தாம்பரம், ராயபுரம் ஆகிய 2 ரயில் நிலையங்களை ரயில் முனையங்களாக்கக் கோரி ரயில்வே வாரியத்திற்கு நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு கடிதம் அனுப்பியுள்ளார்.
இது குறித்து அவர் ரயில்வே வாரியத்திற்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது,
அண்மைக் காலமாக தமிழகத்தில் பெருகி வரும் ரயில் கட்டமைப்பின் தேவைகளை சந்திக்கும் அளவிற்கு புதிய வசதிகள் உருவாக்கப்படவில்லை. தமிழகத்தில் ரயில் சேவை இல்லாத பகுதிகளுக்கும், கூடுதல் தேவை நிலவும் இடங்களுக்கும் ரயில் சேவைகளை விரிவுபடுத்த வேண்டும்.
தாம்பரத்தில் மூன்றாவது ரயில் முனையம் அமைப்பதற்கான அனுமதி வழங்கப்பட்டு, ரூ. 41 கோடிக்கு திட்ட மதிப்பீடும் செய்யப்பட்ட போதிலும் போதிய நிதி ஒதுக்கப்படாததால் அப்பணி தடைபட்டிருக்கிறது. அதனை குறித்த காலத்திற்குள் நிறைவேற்ற குறைந்தது ரூ.30 கோடி நிதியை வருகிற பட்ஜெட்டில் ஒதுக்க வேண்டும். ஆங்கிலேயர்களால் 1856ம் ஆண்டு உருவாக்கப்பட்ட ராயபுரம் ரயில் நிலையத்தை புதுப்பித்து சென்னையின் 4வது ரயில் முனையமாக மாற்ற வேண்டும்.
தஞ்சாவூர்-திருச்சி இடையே போக்குவரத்தை கையாளும் திறனைவிட தற்போது 146 சதவீதம் கூடுதலாக ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. எனவே இங்கு கூடுதல் ரயில் பாதை அமைத்து இரட்டை பாதையாக விரிவுபடுத்த வேண்டும். காரைக்கால்-பேரளம் இடையே புதிய ரயில் பாதை அமைக்க வேண்டும்.
ஆவடி-ஸ்ரீபெரும்புதூர்-கூடுவாஞ்சேரி இடையே புதிய ரயில் பாதை அமைப்பதற்கான ஆய்வுப்பணி முடிவடைந்துவிட்ட நிலையில் இங்கு விரைவாக ரயில் பாதை அமைக்க வேண்டும். பல்வேறு புதிய ரயில் பாதைகள் அமைத்தல், இரட்டை பாதையாக விரிவுபடுத்துதல், அகல பாதையாக மாற்றுதல் ஆகிய பணிகள் மெதுவாக மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக கணிசமான தொகையை ஒதுக்கி பணிகளை விரைவு படுத்த வேண்டும்.
மன்னார்குடி-பட்டுக்கோட்டை புதிய ரயில் பாதையை 2 ஆண்டுகளுக்குள் முடிக்க வேண்டும். வேளாங்கண்ணி-திருக்குவளை-திருத்துறைப்பூண்டி புதிய ரயில் பாதை பணிக்கு ரூ.65 கோடி ஒதுக்க வேண்டும். சென்னை பெரம்பூரில் இரண்டாவது ரயில் பெட்டி தொழிற்சாலை அமைக்க நிதி ஒதுக்க வேண்டும்.
டெல்லி-கன்னியாகுமரி இடையே புதிய ரயிலை தினசரி இயக்க வேண்டும் அல்லது திருக்குறள் விரைவு ரயிலை தினசரி இயக்க வேண்டும். வாரம் இருமுறை இயக்கப்படும் சென்னை-ராஜ்தானி விரைவு ரயிலையும் தினசரி இயக்க வேண்டும். இருகூர்-கோயம்புத்தூர் இரட்டை ரயில் பாதை நிறைவடைந்து விட்டதால் திருப்பி விடப்பட்ட 13 கேரளா செல்லும் ரயில்களை கோயம்புத்தூர் வழியாக இயக்க வேண்டும் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications