ஜல்லிக்கட்டில் கலந்து கொள்ள 'குடி'மகன்களுக்கு தடை: மதுரை கலெக்டர்
மதுரை: மதுரை மாவட்டத்தில் நடைபெறவுள்ள ஜல்லிகட்டு விழாவில் மது அருந்திவிட்டு வரும் மாடுபிடி வீரர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று அம்மாவட்ட கலெக்டர் சகாயம் அறிவித்துள்ளார்.
மாடுபிடி வீரர்களுக்கான பயிற்சி வகுப்பு மதுரை மாவட்ட கலெக்டர் அலுவலக வளர்ச்சிமன்ற கூட்ட அரங்கில் கலெக்டர் சகாயம் தலைமையில் நடைபெற்றது.
அப்போது சகாயம் பேசியதாவது,
தமிழ்நாட்டு மக்களின் மரபு மற்றும் தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிகட்டு விழாவை தொடர்ந்து நடத்த தமிழக அரசு முழு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. தமிழக அரசின் உத்தரவின்படியும், உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலின்படியும், ஜல்லிகட்டு விழா வரும் 15,16 மற்றும் 17 தேதிகளில் அவனியாபுரம், பாலமேடு மற்றும் அலங்காநல்லூர் ஆகிய பகுதிகளில் முன்பு போல் நடைபெற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
சிறுவிதிமீறல் கூட இல்லாமல், காளைகளுக்கு எந்தவொரு தொந்தரவும் கொடுக்காமல் கவனமாக செயல்பட வேண்டும். மாடுபிடி வீரர்கள் காளைகளின் கண்களில் மிளகாய்பொடி தூவுவதோ, எந்தவொரு உபகரணத்தை கொண்டு தாக்குவதோ, காயப்படுத்தவோ கூடாது. கும்பலாக வந்து காளைகளை பிடிக்கக் கூடாது. குறிப்பாக இளைஞர்கள் மது அருந்திவிட்டு எந்த சூழ்நிலையிலும் இந்த விழாவில் கலந்து கொள்ளக் கூடாது. வீரர்கள் அனைவரும் மருத்துவப் பரிசோதனைக்கு உட்பட்டிருக்க வேண்டும்
மேலும் சட்ட விதிகளுக்கு உட்பட்டு இந்த ஜல்லிக்கட்டு விழாவை சிறப்பாக நடத்த முழு ஒத்துழைப்பு தரவேண்டும்.
கிராம நிர்வாக அலுவலகங்கள் மற்றும் வட்டாட்சியர் அலுவலகங்களில் மாடுகளை பதிவு செய்வதற்கான சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதே போன்று மாடுபிடி வீரர்களுக்கு அடையாள அட்டைகள் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றார்.












Click it and Unblock the Notifications