தானே புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ. 100 கோடி தர அரசு ஊழியர்கள் முடிவு
மதுரை: தானே புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ அரசு ஊழியர்கள் சார்பில் ரூ. 100 கோடி நிதியுதவி அளிக்கப்படும் என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் சங்கம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அச்சங்கத்தின் தலைவர் கு.பாலசுப்பிரமணியம் மதுரையில் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
சங்கத்தின் மாநில பொதுக்குழு கூட்டம் வருகிற 28, 29 ஆகிய 2 நாட்கள் மதுரையில் நடத்தப்படுகிறது. 28-ந் தேதி பல்வேறு சங்கங்கள் சார்பில் விலைவாசி உயர்வு, பொதுத்துறைகளை தனியார் மயமாக்கல் ஆகியவற்றை கண்டித்து போராட்டம் நடத்தப்படுகிறது.
இதில் அரசுப் பணியாளர் சங்கமும் கலந்து கொள்ளும். அரசுப் பணியாளர்களுக்கு புதிய பென்ஷன் திட்டத்தினை கைவிட்டு, பழைய திட்டத்தையே தொடர்ந்து அமல்படுத்த வேண்டும். காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். குறைந்தபட்ச மாத ஊதியமாக ரூ.10 ஆயிரம் என்று நிர்ணயிக்க வேண்டும். அங்கன்வாடி பணியாளர்களுக்கு விடுமுறை அளிக்க வேண்டும்.
தானே புயல் காரணமாக கடலூர் மாவட்டத்தில் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. இதனால் தமிழக அரசு மத்திய அரசிடம் நிவாரண உதவியாக நிதி கேட்டுள்ளது.
புயலினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு ஊழியர் சங்கம் சார்பில் நிவாரண உதவியாக ஒரு நாள் ஊதியத்தை வழங்க எங்களுடைய மத்திய குழு கூடி முடிவு செய்யும். இதில் அரசுப்பணியாளர் சங்கம், சகோதர மற்றும் இணைப்பு சங்கங்கள் அனைத்தும் இணைந்து ஒருநாள் ஊதியமான ரூ.100 கோடியை அரசிடம் வழங்க இருக்கிறோம்.
புயலினால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள மீனவர்களுக்கு நிவாரண உதவியை உடனடியாக வழங்க வேண்டும். போலி ரேஷன் கார்டுகளை தனி அதிகாரிகளை நியமித்து ஒழிக்க வேண்டும். அதன்பிறகு டிஜிட்டல் ரேஷன் கார்டுகளை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.












Click it and Unblock the Notifications