புரொமோஷன் கிடைத்த குஷியில் குடித்துவிட்டு மாடியில் இருந்து தவறி விழுந்த வங்கி ஊழியர் சாவு
கோவை: கோவையில் புரொமோஷன் கிடைத்த குஷியில் குடித்துவிட்டு மாடியில் இருந்து கால் தவறி விழுந்த தனியார் வங்கி ஊழியர் பரிதாபமாக இறந்தார்.
கோவை பீளமேடு பாரதி காலனியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வசித்து வந்தவர் பாலாஜி வெங்கடேஷ்வரன் (38). தனியார் வங்கியில் உதவி மேலாளராக இருந்தார். நேற்று அதிகாலை 3.15 மணி அளவில் அவர் 4வது மாடியில் இருந்து விழுந்து இறந்தார். இது குறித்து தகவல் அறிந்த பீளமேடு இன்ஸ்பெக்டர் ஜீவானந்தம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரது உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்தனர். விசாரணையில் பாலாஜி குடிபோதையில் கால் தவறி விழுந்து இறந்தது தெரிய வந்தது.
விசாரணையில் கிடைத்த தகவல்கள் வருமாறு,
தனியார் வங்கியின் இன்சுரன்ஸ் பிரிவில் உதவி மேலாளராக இருந்த பாலாஜிக்கு மேலாளராக பதவி உயர்வு கிடைத்தது. இதையடுத்து பார்ட்டி கொடுக்குமாறு சக ஊழியர்கள் கேட்டனர். அதன்படி அவினாசி ரோட்டில் உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் நேற்றுமுன்தினம் இரவு தனது நண்பர்கள் மற்றும் சக ஊழியர்களுக்கு பார்ட்டி கொடுத்தார்.
இரவு 10 மணிக்கு துவங்கிய பார்ட்டி அதிகாலை 2 மணி வரை நடந்துள்ளது. அப்போது மது விருந்தும் அளிக்கப்பட்டுள்ளது. அனைவரையும் அனுப்பி வைத்துவிட்டு கடைசி ஆளாக கிளம்பிய பாலாஜி அதிகாலை 3.05 மணிக்கு காரில் தனது குடியிருப்பை அடைந்தார். தள்ளாடி, தள்ளாடி ஒரு வகையாக 4வது மாடியில் உள்ள தனது வீட்டுக்கு சென்றார்.
அப்போது வீடு பூட்டியிருந்ததால் மொட்டை மாடிக்கு சென்றார். அங்கு புகைப்பிடித்தபடியே கீழே எட்டிப்பார்த்தார். அப்போது தடுமாறி கீழே விழுந்து பரிதாபமாக இறந்தார் என்று போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது.












Click it and Unblock the Notifications