முன்னாள் டிஜிபி நட்ராஜ் டிஎன்பிஎஸ்சி தலைவராக நியமனம்

கடந்த திமுக ஆட்சிக்காலத்தில் டிஎன்பிஎஸ்சி தலைவராக நியமிக்கப்பட்டவர் செல்லமுத்து. ஆட்சி மாறி அதிமுக பதவிக்கு வந்த பின்னர் சமீபத்தில் செல்லமுத்து மற்றும் டிஎன்பிஎஸ்சி உறுப்பினர்கள் 14 பேரின் வீடுகளிலும் அதிரடி ரெய்டு நடத்தப்பட்டது.
செல்லமுத்து உள்ளிட்டோர் மீது லஞ்ச ஒழிப்புப் போலீஸார் வழக்கும் பதிவு செய்தனர். ரெய்டுகளும் தொடர்ந்தபடி இருந்தனர். இதையடுத்து செல்லமுத்து சமீபத்தி்ல தனது பதவியை ராஜினாமா செய்தார்.
இந்த நிலையில் இன்று டிஎன்பிஎஸ்சி தலைவராக முன்னாள் டிஜிபி ஆர்.நட்ராஜ் நியமிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
நட்ராஜ் ஓய்வு பெற்ற டிஜிபி ஆவார். இவர் ஓய்வு பெற்றபோது தீயணைப்புத்துறை டிஜிபியாக இருந்தார். கடந்த திமுக ஆட்சியின்போது டிஜிபி பதவியில் லத்திகா சரண் நியமிக்கப்பட்டார். இதை எதிர்த்து கோர்ட்டுகளுக்குச் சென்றவர் நட்ராஜ். இருப்பினும் அதன் தீர்ப்பு வருவதற்குள் அவர் ஓய்வு பெற்று விட்டார்.
சமீபத்தில் லத்திகா சரண் நியமனம் செல்லும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது. இந்த நிலையில் நட்ராஜ் டிஎன்பிஎஸ்சி தலைவராகியுள்ளார்.
வீரப்பனைப் பிடிக்க அமைக்கப்பட்ட அதிரடிப்படைத் தலைவராக செயல்பட்டுள்ளார் நட்ராஜ். மேலும், சென்னை மாநகர ஆணையாளர், சிறைத்துறை, தீயணைப்புத்துறை டிஜிபியாகவும் செயல்பட்டுள்ளார்.
மறைந்த குடியரசுத் தலைவர் ஆர்.வெங்கட்ராமனின் உறவினர்தான் நட்ராஜ் என்பது நினைவிருக்கலாம்.
துக்ளக் விழாவில் பங்கேற்றார்
சமீபத்தில் சென்னையில் நடந்த துக்ளக் பத்திரிக்கை விழாவில் ஆர்.நட்ராஜும் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த விழாவில் குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, பாஜக தலைவர் அத்வானி உள்ளிட்டோரும் பங்கேற்றனர் என்பது நினைவிருக்கலாம்.












Click it and Unblock the Notifications