பஸ்சை விட ரயிலில் 5 மடங்கு கட்டணம் குறைவு - ரயில்வே பொது மேலாளர் தீபக் கிருஷ்ணன்

ராமேஸ்வரத்தில் இருந்து மதுரை வரையிலான ரெயில் பாதையை சிறப்பு ரயில் மூலம் ஆய்வு செய்த தென்னக ரயில்வேயின் பொது மேலாளர் தீபக் கிருஷ்ணன், மதுரை ரயில் நிலையத்தில் ரூ.3 கோடியே 20 லட்சம் மதிப்பில் நவீன வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறையை அவர் திறந்து வைத்தார்.
அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், "இன்றைய நவீன உலகில் ரயில்வே துறை எதிர்கால நலன் கருதி, பழைய கட்டுப்பாட்டு அறையை மாற்றி, நவீன தொழில்நுட்பங்களுக்கு ஏற்ப பாதுகாப்புக் காரணங்களுக்காக கம்ப்யூட்டர் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.
மதுரை கோட்டத்தில் உள்ள 1,200 கி.மீ சுற்றளவில் உள்ள அனைத்து சிக்னல்கள், தகவல் பரிமாற்றங்கள் இக்கட்டுப்பாட்டு அறை மூலம் ஒரே இடத்தில் இருந்து கண்காணிக்கப்படும். இதன்மூலம் பயணிகளின் பாதுகாப்பு உறுதி செய்யப்படுகின்றது.
பஸ் கட்டண உயர்வை தொடர்ந்து ராமேஸ்வரம் - சென்னை இடையே கூடுதல் ரயில்களை இயக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பு பயணிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து பரிசீலனை செய்யப்படும்.
தற்போது தென் மாவட்டங்களில் இருந்து சென்னை செல்லும் ரயில்களில் அதிகபட்சமாக 24 பெட்டிகளை இணைக்க திட்டமிட்டு உள்ளோம். இதனால் புதிதாக உருவாக்கப்படும் ரயில் நிலையங்களில் 26 பெட்டிகளை நிறுத்தும் வகையில் பிளாட்பாரத்தை வடிவமைத்து வருகின்றோம். கூடுதல் ரயில்கள் இயக்க ரயில் பெட்டிகளும், இன்ஜின்களும், ஓட்டுநர்களும் தேவைப்படுகின்றனர்.
கடந்த ஆண்டை விட தற்போது தென்னக ரயில்வேயில் 6,000 கூடுதல் ரயில்கள் இயக்கப்படுகின்றன. இது 12 சதவீத வளர்ச்சி ஆகும். இதில் சரக்கு ரயில்களும் அடங்கும். ரயில் கட்டணம் பஸ் கட்டணத்தை விட 5 மடங்கு குறைவு. அதனால் பயணிகள் அதிக அளவில் ரயில் பயணத்தை விரும்புகின்றனர்.
செங்கல்பட்டு - விழுப்புரம் இடையே 20 கி.மீட்டர் தூரத்துக்கு இரட்டை அகல ரயில் பாதை அமைக்கும் பணிகள் இந்த ஆண்டுக்குள் முடிவடைந்து அடுத்த ஆண்டு ரயில்கள் இயக்கப்படும்.
விழுப்புரம் - திருச்சி இடையே இரட்டை அகலப்பாதை அமைக்கும் பணிகளும் விரைவாக நடைபெற்று வருகின்றது. நிதி ஒதுக்கீட்டின் அடிப்படையில் பணிகள் விரைவு பெறும். இந்த பணிகள் காரணமாக தற்போது அந்த பாதையில் ரயில்கள் குறைவான வேகத்தில் இயக்கப்படுகின்றது," என்றார்.












Click it and Unblock the Notifications