இலங்கையின் வளர்ச்சிக்கு உதவ தயார்- கொழும்பில் கலாம் அறிவிப்பு

விடுதலைப் புலிகளுடனான போரை மிகக் கொடூரமாக முடிவுக்குக் கொண்டு வந்த பின்னர், பல ஆயிரக்கணக்கான அப்பாவித் தமிழ் மக்களைக் கொன்று குவித்து தமிழர் பகுதிகளை சுடுகாடாக்கி, தமிழர்களை பிச்சைக்காரர்களாக மாற்றிய பின்னர், எழுந்துள்ள மனித உரிமை மீறல்கள், போர்க்குற்றச்சாட்டுக்ளிலிருந்து மீள பல்வேறு அறிவிப்புளையும், நடவடிக்கைகளையும் எடுத்து சர்வதேச சமுதாயத்தின் கண்களில் தான் நல்லவன் என்பதை வெளிக்காட்ட பல்வேறு பாவ்லாக்களை செய்து வருகிறார் ராஜபக்சே.
அதில் ஒன்றுதான் 2012ம் ஆண்டை மும்மொழி கல்வித் திட்ட ஆண்டு என்று அவர் அறிவித்தது. இத்திட்டத்தின்படி இந்த ஆண்டு முதல் இலங்கையில் சிங்களம், ஆங்கிலம் மற்றும் தமிழில் கல்வித் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளதாம். இந்தத் திட்டத்தின் தொடக்க விழாவுக்கு அப்துல் கலாமை ராஜபக்சே அரசு வரவழைத்துள்ளது.
இதற்கு தமிழ் ஆர்வலர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இருப்பினும் அதைப் பொருட்படுத்தாமல் கலாம் இலங்கை சென்றார். அங்கு கொழும்பில் நடந்த தொடக்க விழாவில் கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் ராஜபக்சே உள்ளிட்ட இலங்கை அரசைச் சேர்ந்தவர்களும் கலந்து கொண்டனர்.
நேற்று நடந்த இந்த நிகழ்ச்சியின்போது பேசிய கலாம், இலங்கையின் கிராமப்புற மக்கள் பயன்பெறும் இத்திட்டங்களை செயல்படுத்த உதவி செய்யத் தயாராக இருக்கிறேன்.
சகிப்புத்தன்மையும், கருத்துகளை சுதந்திரமாக வெளிப்படுத்தும் உரிமையும் சிறப்பான சமூகத்தை உருவாக்கும். பல்வேறு இன மக்கள் வசிக்கும் இந்தியா, இலங்கை போன்ற நாடுகளில் வேற்றுமைக்கு இடம் கொடுத்துவிடக் கூடாது என்றார்.
முன்னதாக செய்தித்தாள் ஒன்றுக்கு பேட்டி கொடுத்திருந்த கலாம் கூறுகையில், இலங்கையில் அமைதியை உருவாக்குவதே எனது பயணத்தின் நோக்கம். சுபிட்சமான இலங்கையைக் கட்டியெழுப்ப இளைஞர்களுக்கு அறைகூவல் விடுக்க இருக்கின்றேன்.
இணக்கம் மற்றும் செழிப்பு கொண்ட அமைதியான இலங்கையை கட்டியெழுப்ப இரு தரப்புத் தலைவர்களையும் நான் சந்திக்க இருக்கிறேன்.
எனது பயணம் அமைதியை ஊக்குவிப்பதற்கானது. சிலர் விமர்சித்தாலும் அது அவர்களின் ஜனநாயக உரிமை. குறிப்பிட்ட எந்தப் பிரச்சினைக்கும் போர் மூலம் தீர்வு காணமுடியாது. மோதல்களுக்கான தீர்வாக எந்தவொரு போரும் அமையவில்லை என்று கூறியிருந்தார்.
நான்கு நாட்கள் இலங்கையில் சுற்றுப்பயணம் செய்கிறார் கலாம். அதில் முக்கியமாக யாழ்ப்பாணத்திற்கு நாளை செல்லவுள்ளார்.












Click it and Unblock the Notifications