துப்பாக்கி முனையில் சென்னை வங்கியில் ரூ. 24 லட்சம் துணிகர கொள்ளை
சென்னை: சென்னை பெருங்குடியில் பட்டப் பகலில் நான்கு பேர் கொண்ட கும்பல் புகுந்து துப்பாக்கி முனையில் ரூ. 24 லட்சம் பணத்தைக் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
சென்னை பெருங்குடி ராஜீவ்காந்தி சாலையில் பாங்க் ஆப் பரோடா வங்கியின் கிளை உள்ளது. இந்த வங்கி அமைந்துள்ள கட்டடத்தின் தரை தளத்தில் கட்டிட உரிமையாளர் தேனாராமுக்கு சொந்தமான மின்சாதன பொருட்கள் கடை உள்ளது. மாடியில் வங்கி உள்ளது. மாடிக்கு செல்லும் படிக்கட்டின் அருகே வங்கியின் ஏ.டி.எம். உள்ளது.
மேலாளராக பாலாஜி என்பவரும், கேஷியராக ஆனந்தன் என்பவரும் உள்ளனர். வங்கிக்கு என்று தனியாக காவலாளி கிடையாது. ஏ.டி.எம்.முக்கு காவலாளியாக நியமிக்கப்பட்டு உள்ள தர்மையா என்பவரே வங்கியையும் பார்த்துக்கொள்வார்.
நேற்று பிற்பகல் 2 மணியளவில் 10 வாடிக்கையாளர்கள் வங்கிக்குள் இருந்தனர். இந்த சமயத்தில் நான்கு வாட்டசாட்டமான இளைஞர்கள் காரில் வங்கிக்கு வந்தனர். வாடிக்கையாளர்கள் போல் வந்த அவர்கள் உள்ளே நுழைந்ததும், வங்கி கணக்கில் இருந்து பணம் எடுக்க வந்தவர்கள் போல் வாடிக்கையாளர்களுடன் வரிசையில் நின்றபடி அங்கும், இங்குமாக நோட்டமிட்டனர்.
அவர்களில் ஒருவன் திடீரென்று வரிசையில் இருந்து நைசாக நழுவி மேலாளரின் அறைக்குள் சென்று துப்பாக்கியை காட்டி, இந்தியில் பேசி சத்தம் போட்டால் கொன்று விடுவேன் என்று மிரட்டினான்.
இதையடுத்து அவனுடன் வந்த மற்ற 3 பேரும் தங்களிடமிருந்த துப்பாக்கிகளை எடுத்து வங்கிக்குள் காத்திருந்த வாடிக்கையாளர்களையும், வங்கி ஊழியர்களையும் மிரட்டி அமைதியாக இருக்குமாறு எச்சரித்தனர்.
அப்போது ஒரு வாடிக்கையாளர் தனது செல்போனை எடுத்து யாருக்கோ தகவல் தர முயன்றார். இதைப் பார்த்த கொள்ளையன் அவரைத் தாக்கினான். இந்தியிலேயே பேசிய நால்வரும் கைகளில் துப்பாக்கியுடன் மிரட்டியதால் ஊழியர்களும், வாடிக்கையாளர்களும் சத்தம் போடாமல் அமைதியாக இருந்தனர். பின்னர் அனைவரையும் ஒரு இடத்தில் நிறுத்தினர்.
2 பேர் மேலாளரையும், கேஷியரையும் துப்பாக்கியை காட்டி பணத்தை எடுத்து வைக்கும்படி மிரட்டினார்கள். பின்னர் அங்கிருந்த ரூ.24 லட்சம் பணத்தை தாங்கள் கொண்டு வந்திருந்த 4 ஜோல்னா பைகளில் போட்டுக் கொண்டனர்.
அதன் பின்னர் வங்கி ஊழியர்களையும், வாடிக்கையாளர்களையும் அறைக்குள் போட்டுப் பூட்டி விட்டு கிளம்பிப் போய் விட்டனர்.
இதையடுத்து தேனாராமை தொலைபேசி மூலம் அழைத்த வங்கி மேலாளர் பாலாஜி கொள்ளைச் சம்பவம் குறித்துக் கூறினார். இதையடுத்து அவர் பதட்டத்துடன் மேலே வந்தார். துரைப்பாக்கம் போலீஸாருக்குத் தகவல் போனது. மாநகர காவல்துறை ஆணையர் ஜே.கே.திரிபாதி உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகளும் விரைந்து வந்தனர்.
கை ரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். மோபப் நாயும் வரவழைக்கப்பட்டது.
இந்த துணிகரக் கொள்ளை குறித்து போலீஸார் கூறுகையில்,
பிற்பகல் 1.45 மணி அளவில் பாங்க் ஆப் பரோடா வங்கி கிளைக்கு வந்த 4 கொள்ளையர்கள் துப்பாக்கியை காட்டி மிரட்டி பணத்தை கொள்ளையடித்துச் சென்று உள்ளனர். கொள்ளையர்கள் இந்தி மொழியில் பேசியதால் அவர்கள் வட இந்தியர்களைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்று கருதுகிறோம்.
இந்த வங்கியில் கண்காணிப்பு கேமரா இல்லை என்பதால் கொள்ளையர்களை பற்றிய விவரம் எதுவும் உடனடியாக தெரியவில்லை. தப்பி ஓடிய கொள்ளையர்களை பிடிக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. வாகன சோதனை மும்முரப்படுத்துப்பட்டு இருக்கிறது. ஏற்கனவே நடந்த குற்ற செயல்களில் சம்பந்தப்பட்ட வட இந்தியர்களின் புகைப்படங்களை வைத்தும் விசாரித்து வருகிறோம் என்றனர்.
மக்கள் நடமாட்டம் மிகுந்த முக்கியச் சாலையில் அமைந்துள்ள வங்கியில் இவ்வளவு துணிகரமாக கொள்ளை நடந்திருப்பது மக்களை அதிர வைத்துள்ளது. அதை விட அதிர்ச்சியாக, இந்த வங்கியில் கண்காணிப்பு கேமரா வசதியோ, காவலாளியோ இல்லாமல் பெரும் அலட்சியமாக இருந்திருப்பது மக்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. முக்கியமான வங்கிக்குக் காவலாளியை வைப்பதை விட்டு ஏடிஎம்முக்கு மட்டும் காவல் வைத்திருந்தது வினோதமாக உள்ளது.
தனிப்படைகளை அமைத்து போலீஸார் தீவிர வேட்டையை முடுக்கி விட்டுள்ளனர். நான்கு கொள்ளையர்களும் வெளி மாநிலங்களுக்குத் தப்பி விடாமல் தடுப்பதற்காக தீவிர கண்காணிப்பும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறிப்பாக சென்டிரல் ரயில் நிலையத்தில் தீவிர சோதனை முடுக்கி விடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications