ரூ. 4.5 கோடியில் 5 பி.சி., எம்.பி.சி. மாணவர் விடுதிகளுக்கு கூடுதல் கட்டிடங்கள்: ஜெயலலிதா உத்தரவு
சென்னை: தஞ்சை மாவட்டம் பூண்டி, ராமநாதபுரம் மாவட்டம் நீராவி, ராமநாதபுரம், நாகை மாவட்டம் ஆயக்காரன்புலம் மற்றும் விழுப்புரம் மாவட்டம் சின்னசேலத்தில் உள்ள 5 பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர் மரபின மாணவ மாணவியர் தங்கும் விடுதிகளுக்கு கூடுதல் கட்டிடங்கள் கட்ட முதல்வர் ஜெயலலிதா ரூ.4.5 கோடி நிதி ஒதுக்கியுள்ளார்.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
“எண் என்ப ஏனை எழுத்துஎன்ப இவ்விரண்டும் கண் என்ப வாழும் உயிர்க்கு” என்ற வள்ளுவன் வாக்கின்படி அனைத்து தரப்பு மக்களும் குறிப்பாக ஏழை, எளிய மக்கள்
அனைவரும் கல்வி கற்க வேண்டும் என்பது தான் மாண்புமிகு தமிழக முதல்வர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்கள் தலைமையிலான அரசின் தலையாய நோக்கமாகும்.
இதன் அடிப்படையில் மாணவ மாணவியர்கள் படிப்பதற்காக கல்வி உதவித் தொகை வழங்குதல், விலையில்லா மிதிவண்டி, விலையில்லா புத்தகங்கள் ஆகியன வழங்குதல், தங்கும் விடுதிகள் கட்டுதல் போன்ற எண்ணற்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதன் அடிப்படையில் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர் மரபின மாணவ மாணவியர்கள் தங்கிப் படிப்பதற்கு வசதியாக 5 விடுதிகளுக்கு, சொந்தக் கட்டிடம் கட்டுவதற்கு 4 கோடியே 50 லட்சம் ரூபாய் நிதியை ஒதுக்கீடு செய்து மாண்புமிகு தமிழக முதல்வர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள்.
இதன்படி தஞ்சாவூர், பூண்டியில் உள்ள மிகப் பிற்படுத்தப்பட்டோர் கல்லூரி மாணவர் விடுதிக்கு 100 மாணவர்கள் தங்கும் வகையில் கட்டிடமும், ராமநாதபுரம் மாவட்டம், நீராவியில் உள்ள பிற்படுத்தப்பட்டோர் நல பள்ளி மாணவியர் விடுதிக்கு 100 மாணவியர்கள் தங்கும் வகையில் ஒரு கட்டிடமும், ராமநாதபுரத்தில் உள்ள சீர் மரபினர் கல்லூரி மாணவியர் விடுதிக்கு 100 மாணவியர் தங்கும் வகையில் ஒரு கட்டிடமும், நாகப்பட்டினம் மாவட்டம் ஆயக்காரன்புலத்தில் உள்ள பிறப்படுத்தப்பட்டோர் நலப் பள்ளி மாணவியர் விடுதிக்கு 100 மாணவியர் தங்கும் வகையில் ஒரு கட்டிடமும், விழுப்புரம் மாவட்டம் சின்னசேலத்தில் உள்ள மிகப்பிற்படுத்தப்பட்டோர் பள்ளி மாணவியர் விடுதிக்கு 100 மாணவியர் தங்கும் வகையில் ஒரு கட்டிடமும் என 5 இடங்களில் பிற்படுத்தப்பட்ட மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர் மரபின மாணவ மாணவியருக்கான விடுதிகளுக்கு கட்டிடங்கள் கட்டித் தருவதற்கு மாண்புமிகு தமிழக முதல்வர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள்.
இதன் மூலம் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர் மரபின மாணவ மாணவியர் அனைத்து வசதிகளுடன் கூடிய நல்ல சூழ்நிலையில் தங்கி கல்வி பயில்வதற்கான வாய்ப்பினை பெறுவார்கள் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.