ஊழல்வாதிகளுக்கு காங்கிரஸில் இடமில்லை - ராகுல் காந்தி

பஞ்சாப் மாநிலத்தில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டுள்ள அவர், மால்வா பகுதியில் நடைபெற்ற காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் பேசுகையில், "ஊழல்வாதிகளுக்கு காங்கிரஸ் கட்சியில் இடம் இல்லை. காங்கிரஸ் ஊழலை முழுமையாக எதிர்க்கிறது. எங்கள் கட்சிக்காரர்கள் யாராவது ஊழல் செய்தால் அவர்களது அரசியல் வாழ்வு அஸ்தமித்துவிடும். அந்த அளவுக்கு கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்வேன் என்று உங்களுக்கு உறுதியளிக்கிறேன். கட்சியில் மட்டுமின்றி நாட்டில் இருந்தே ஊழலை ஒழிக்க வேண்டுமென்று உறுதிபூண்டுள்ளேன்.
காங்கிரஸ் வேட்பாளர்கள் தவறு செய்தால்...
இப்போது நடைபெறவுள்ள தேர்தலுக்காக காங்கிரஸ் வேட்பாளர்களைத் தேர்வு செய்யும் முன், போட்டியிட வாய்ப்புக் கேட்டு விண்ணப்பித்த காங்கிரஸ் கட்சியினரை சந்தித்துப் பேசினேன். அப்போது உங்களுக்கு வாய்ப்பு அளித்து நீங்கள் வெற்றி பெற்றபின், ஏதாவது சிறிய அளவில் ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்தால் கூட உடனடியாக உங்களை கட்சியில் இருந்து நீக்கிவிடுவேன் என்று எச்சரித்துள்ளேன்.
பஞ்சாபை கலிஃபோர்னியாக மாற்றுவதாக பொய் சொன்னவர்கள்....
இப்போது ஆட்சியில் உள்ளவர்கள், இதைச் செய்வோம், அதைச் செய்வோம் என்று பலவாறு கூறினார்கள். பஞ்சாபை கலிஃபோர்னியாவாக மாற்றப்போவதாகத் தெரிவித்தார்கள். ஆனால் கடைசியில் மக்களுக்காக எதையும் செய்யவில்லை. தங்கள் சுயநலத்துக்கான காரியங்களைச் சாதித்துக் கொண்டனர்.
பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்துப் பேசி வருகிறார் பாஜக மூத்த தலைவர் அத்வானி. ஆனால் பாஜக ஆட்சியில் உள்ள கர்நாடகம், ஜார்க்கண்ட், சத்தீஸ்கர், பஞ்சாப் மாநிலத்தில் நிகழ்ந்துள்ள ஊழல்கள் பற்றி அவர் பேச மறுக்கிறார்.
வலுவான லோக்பால் மசோதாவைக் கொண்டு வர வேண்டும் என்பதில் காங்கிரஸ் கட்சி உறுதியாக உள்ளது. அதற்கு அரசியல்சாசன அந்தஸ்து வழங்க வேண்டும் என்று நினைத்தோம்.
பாஜக உள்ளிட்ட கட்சிகள்தான் இதற்கு நாடாளுமன்றத்தில் தடையாக இருந்தன. லோக்பால் மசோதாவை மாநிலங்களவையில் நிறைவேற்ற முடியாமல் செய்தது பாஜகதான் என்பதை மறந்துவிடக் கூடாது.
இளைஞர்களின் கனவு, லோக்பால்
லோக்பால் மசோதா என்பது எங்கள் கட்சியின் கனவு மட்டுமல்ல, இந்திய இளைஞர்கள் அனைவரது கனவும் கூட. பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோர் லோக்பால் மசோதாவை நாடாளுமன்றத்தில் கொண்டு வந்தனர்.
ஆனால் அந்த மசோதாவை மாநிலங்களவையில் நிறைவேறவிடாமல் தடுத்து நிறுத்தி பாஜக கூட்டணி மகிழ்ச்சியடைந்தது. அதே நேரத்தில் லோக்பால் மசோதாவைக் கொண்டு வர காங்கிரஸ் கட்சிக்கு விருப்பமில்லை என்று தவறாக பிரசாரமும் செய்தார்கள்
ஊழல் விஷயத்தில் மத்திய அரசு பாரபட்சமின்றி நடவடிக்கை எடுத்து வருகிறது. ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளானவர்கள் எங்கள் கூட்டணியைச் சேர்ந்த அமைச்சராக இருந்தாலும், எங்கள் கட்சி எம்.பி.யாக இருந்தாலும் அவர்கள் சிறையில்தான் உள்ளார்கள்.
காங்கிரஸ் ஆளும் மாநிலங்களிலும் ஊழலுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன," என்றார் ராகுல்.












Click it and Unblock the Notifications