2014 லோக்சபா தேர்தலில் போட்டியில்லையாம்! சரத்பவார் முடிவு !!
மும்பை : இளைஞர்களுக்கு வழிவிட்டு அரசியலில் இருந்து ஓய்வு பெறப்போவதாக தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவரும் மத்திய வேளாண்துறை அமைச்சருமான சரத்பவார் தெரிவித்துள்ளார்.
இது குறித்து ஆங்கில தொலைக்காட்சி ஒன்றுக்கு அவர் அளித்த சிறப்பு பேட்டி:
1967 முதல் இந்த அரசியல் வாழ்வில் இருந்து மக்களுக்காக ஓய்வில்லாமல் உழைத்து வருகிறேன். நான் அரசியலுக்கு வந்து 45 ஆண்டுகள் ஆகின்றன. இதுவரை நான் எந்த தேர்தலிலும் தோற்றதில்லை. இளைஞர்களுக்கு வழிவிடும் பொறுப்புணர்ச்சி எனக்கு உள்ளது.
எனவே வரும் 2014 லோக்சபா தேர்தலில் நான் போட்டியிட மாட்டேன். இதன் மூலம் இளைஞர்களை அரசியலுக்கு கொண்டு வந்து ஊக்கமளிப்பேன்", என்றார். (இதே முடிவை வயதான தலைவர்கள் எல்லோரும் எடுத்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்!).
இந்த அறிவிப்பு எத்தனை பேருக்கு மகிழ்ச்சியளிக்கிறதோ தெரியவில்லை. ஆனால் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் விலைவாசிக்கான காரணம் குறித்து பவார் விளக்கம் அளித்த போது அவரது கன்னத்தில் ஒருவர் அறை விட்டார். அந்த நபர் தற்போது ஜாமீனில் இருக்கிறார்.
பவாரின் அறிவிப்புக்கு நிச்சயம் அவருக்கு மகிழ்ச்சியைத் தந்திருக்கும் என நம்பலாம்!