கோவிலிலிருந்து குழந்தையைக் கடத்திய விபச்சார அழகி கைது
புதுவை: புதுவையில் கோவிலில் விளையாடிக் கொண்டிருந்த ஒன்றரை வயது ஆண் குழந்தையைக் கடத்திய விபச்சார அழகி கைது செய்யப்பட்டார். குழந்தையும் பத்திரமாக மீட்கப்பட்டது.
வில்லியனூர் அருகே உள்ள பெரியபேட் பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ். மேடைப்பாடகரான அவர் கட்டிட வேலையும் செய்து வந்தார். அவரது மனைவி அலமேலு. சுய உதவிக்குழு செயலாளர். அவர்களுக்கு ஹேமநாதன் (3), புவனேஷ் (1 1/2) ஆகிய 2 ஆண் குழந்தைகள் உள்ளனர்.
கடந்த 23ம் தேதி வங்கிக்கு புறப்பட்ட அலமேலு குழந்தைகளை தனது மாமியார் பத்மாவிதியிடம் விட்டுவிட்டுச் சென்றார். ஆனால் பத்மாவதி பேரன்களை தனது மகன் ரமேஷிடம் விட்டுவிட்டு தனது மகள் வீட்டுக்கு சென்றுவிட்டார். தனது தம்பி மனைவிக்கு வளைகாப்பு நடத்த நல்ல நேரம் குறிகக் ரமேஷும், அவரது சித்தி ஆதவல்லியும் குழந்தைகளை அழைத்துக் கொண்டு வில்லியனூர் திருக்காமீசுவரர் கோவிலில் உள்ள அம்மன் கோவிலுக்கு சென்றனர்.
அங்கு அய்யர் இல்லாததால் அவருக்காக காத்திருந்தனர். ஹோமநாதனும், புவனேஷும் சூலாயுதம் அருகே விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த 20 வயது மதிக்கத்தக்க பெண் குழந்தைகளிடம் நன்றாகப் பழகினாள். இதைப்பார்த்து சந்தேகமடைந்த ரமேஷ் அந்த பெண்ணிடம் விவரம் கேட்டதற்கு தான் பொம்மையார்பாளையத்தை சேர்ந்தவர் என்றும், ஜிப்மர் மருத்துவமனையில் பணி புரிவதாகவும் தெரிவித்தார்.
அந்நேரம் அய்யர் வரவே ரமேஷ் நல்ல நேரம் குறிக்கச் சென்றார். திரும்பி வந்து பார்த்தபோது புவனேஷைக் காணவில்லை. ஹேமநாதனிடம் கேட்டதற்கு பிஸ்கட் வாங்கி வர அந்த பெண் தான் தம்பியைத் தூக்கிச் சென்றதாகத் தெரிவித்தான். வெளியே சென்று தேடியும் அந்த பெண்ணையும், குழந்தையையும் காணவில்லை.
இதையடுத்து ரமேஷும், அலமேலுவும் வில்லியனூர் போலீசில் புகார் கொடுத்தனர். உடனே போலீஸ் சூப்பிரண்டு நந்தகோபால் உத்தரவின் பேரில் இன்ஸ் பெக்டர் பாஸ்கரன், சப்-இன்ஸ்பெக்டர் முத்துகுமார் ஆகியோர் வழக்குப் பதிவு செய்தனர். குழந்தையை மீட்க சப்-இன்ஸ்பெக்டர்கள் முத்துகுமார், செந்தில்குமார், உதவி சப்-இன்ஸ்பெக்டர்கள் பெரியசாமி, ராஜன் ஆகியோர் தலைமையில் 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.
தனிப்படை விசாரணையில் கோவிலுக்கு வந்த பெண் ஒரு ரசீதை தவறவிட்டது கண்டுபிடிக்கப்பட்டது. புதுவை அரசு மருத்துவமனைக்கு எதிரே நகராட்சிக்கு சொந்தமான நோயாளிகளின் உறவினர்கள் தங்குமிடத்தில் தங்கியிருந்த ரசீது என்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து அந்த இடத்திற்கு சென்று விசாரித்ததில் குழந்தையுடன் மாயமான பெண் விபச்சார அழகி என்பதும், அவருக்கு பல இளைஞர்களுடன் தொடர்பு உள்ளதும் தெரிய வந்தது. அந்த பெண்ணுடன் தொடர்பு வைத்திருந்த 2 வாலிபர்களைப் பிடித்து விசாரித்ததில் அரியாங்குப்பத்தைச் சேர்ந்த இளைஞருக்கு அந்த பெண்ணுடன் நெருக்கம் அதிகம் என்பது தெரிய வந்தது. இதையடு்தது அந்த இளைஞரை விசாரித்ததில் அவர் கூறியதாவது, அந்த பெண் திருக்கனூரில் இருக்கலாம். அவர் திருமணமான சில நாட்களிலேயே கணவரைப் பிரிந்தார். பிறகு விழுப்புரம் அருகே உள்ள இருவேல்குடி கிராமத்தைச் சேர்நத் இளைஞரை 2வது முறையாக திருமணம் செய்தார். அதனால் அவர் அங்கு சென்றிருக்கலாம் என்றனர்.
ஆனால் இருவேல்குடிக்கு சென்றபோது தான் அந்த நபரையும் அந்த பெண் பிரிந்தது தெரிய வந்தது. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் நல்லூர் அருகே கிரண்குடி கிராமத்தில் அந்த பெண்ணின் தாத்தா வீடு இருப்பது அறிந்த போலீசார் அங்கு சென்றனர். அங்கு அந்த பெண் குழந்தையுடன் இருந்தார். இதையடுத்து குழந்தையை மீட்ட போலீசார் அந்த பெண்ணை கைது செய்து புதுவைக்கு அழைத்து வந்தனர். பின்னர் குழந்தையை பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.