அரசு செவிலியர் பயிற்சி கல்லூரிகள் தரமற்றவையா? - சீமான் கேள்வி
சென்னை : தமிழ்நாட்டில் அரசு செவிலியர் பயிற்சி கல்லூரியில் படிக்கும் மாணவிகளும் தேர்வு மூலமே பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்ற தமிழக அரசின் அறிவிப்பு ஏற்புடையது அல்ல என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
இந்த அறிவிப்பினை எதிர்த்து அரசு செவிலியர் கல்லூரிகளில் படிக்கும் மாணவியர் போராடுவது நியாயமானதே என்றும் அவர் கூறியுள்ளார். இது தொடர்பாக சீமான் வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழ்நாட்டில் ஏழை, எளிய குடும்பங்களில் இருந்து வருபவர்களே அரசு செவிலியர் கல்லூரிகளில் படித்து வருகின்றனர். இவர்கள் அனைவரும் தாழ்த்தப்பட்ட, இதர பிற்படுத்தப்பட்ட சமூகங்களைச் சேர்ந்த தமிழ்க் குடும்பங்களின் பிள்ளைகள். ஆனால் தனியார் செவிலியர் கல்லூரிகளில் படித்துவரும் மாணவிகளில் பெரும்பாலோர் மற்ற மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் என்பது மட்டுமின்றி, ஒரளவிற்கு வசதி படைத்த குடும்பப் பின்னணியில் இருந்து படிக்க வந்தவர்களாவர்.அவர்கள் படிப்பிற்கே பல்லாயிரம் ரூபாய் செலவு செய்து அனுமதி பெற்று படித்து வருபவர்கள்.
இப்படிப்பட்ட சூழலில், அவர்களும் அரசுப் பணிகளுக்கு தேர்வு செய்யப்படுவார்கள் என்று அரசு அறிவித்திருப்பது நியாயமற்றதாகும். அதுவும் தகுதித் தேர்வு நடத்தி தேர்வு செய்யப்படுவார்கள் என்று தமிழக நலவாழ்த்துறை அமைச்சர் விஜய் கூறியுள்ளது ஏற்கத்தக்கதல்ல.
அப்படியானால் அரசு நடத்தும் தேர்வில் தேர்ச்சி பெறும் செவிலியர்களின் தகுதி ஐயத்திற்குரியதா? என்பதை தமிழக அரசு விளக்க வேண்டும்.
நமது அண்டை மாநிலங்கள் அனைத்திலும் அரசுக் கல்லூரிகளில் படித்துத் தேர்ந்த வர்களுக்கே அரசுப் பணிகளில் முன்னுரிமை அளிக்கப்படுகிறது. எனவே தமிழக அரசுப் பணிகளில் அரசு செவிலியர் கல்லூரிகளில் படித்துத் தேர்ச்சி பெற்ற மாணவிகளுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும், பணிப் பதிவு மூப்பின் அடிப்படையில் பணி நியமனம் செய்யப்பட வேண்டும், பணி சேர்க்கைக்கு போட்டித் தேர்வு கூடாது என்கிற அரசு செவிலியர் கல்லூரி மாணவிகளின் நியாயமான கோரிக்கைகளை தமிழக அரசு உடனடியாக ஏற்றுக்கொள்ள வேண்டும்," என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications